பக்கம் எண் :

உரையாசிரியர்கள்376

உட்பொருள் காணமுயல்வோர் முயற்சி பயனற்றது என்றும் உரைக்கின்றார்.

    கண்ணும் முகமும் கருங்குழலும் செவ்வாயும்
    வண்ண முலையும் வனப்புடைத்தென்று - எண்ணிக்
    கருத்தறியார் சாரலுறும் காளையர்நேர் முப்பால்
    கருத்தறியாது உட்பொருள்காண் பார்
                               (பெருந் - 1541)

     இவரது புதிய உரையை அக்காலத்து மக்கள் புறக்கணித்ததால்
இப்பாடலையும் இயற்றி இருக்கக்கூடும்.

      காலம் : இவர் காமத்துப்பாலின் தொடக்கத்தில் வாத்ஸ்யாயனம்
என்ற காமநூலைக் குறிப்பிடுகின்றார். அந்நூலாசிரியர் காலம் 11-ஆம்
நூற்றாண்டு ஆகும். பரிப்பெருமாள் அக்காலத்திற்குப் பிற்பட்டவர்.

தமிழ் நூலறிவு

    பரிப்பெருமாள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை நிரம்பப்
பெற்றவர். தம் உரையில் ஏற்ற இடங்களில், பல தமிழ் நூல்களை மேற்கோள்
காட்டுகின்றார்.

     காமத்துப்பாலில், காதற் சிறப்புரைத்தல் என்னும் அதிகாரத்தில்
(1126-1129) தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகின்றார்.
மெய்ப்பாட்டியலில் 22-ஆம் நூற்பா கூறும் மெய்ப்பாடுகளை நான்கு
குறட்பாக்களில் கூறுகின்றார்.

மெய்ப்பாட்டியல் 22        -    எதிர் பெய்து பரிதல்; 

                          கண்ணுள்ளிற் போகார் (1126)

     ’’                  -    இன்பத்தை வெறுத்தல்;

                           கண்ணுள்ளார் (1127)

     ’’                 -    பசியட நிற்றல்:

                           நெஞ்சத்தார் (1128)

     ’’                 -    கண் துயில் மறுத்தல்;

                           இமைப்பின் (1129)

     இவ்வாறே காமத்துப்பாலின் தொடக்கத்தில் தொல்காப்பியக் களவியல்
(14) சூத்திரம் இறையனார் அகப்பொருள் சூத்திரமும் இவரது உரையில்
இடம் பெறுகின்றன. பிரிவாற்றாமை அதிகாரத்தின் தொடக்கத்தில், பிரிவு
பற்றி இறையனார் அகப்பொருள் கூறும் சூத்திரம் ஒன்றும் ஆளப்பட்டுள்ளது.