‘நெருதல் உளன் ஒருவன்’ (336) என்பதில் உள்ள ‘உளன்’ என்பதற்கு ‘உளன் ஆயினான் (பிறந்தான்)’ என்று பொருள் எழுதி நிலையாமையை நன்கு வலியுறுத்துகின்றார். ‘எப்பொருள் எத்தன்மைத்து’ (355) என்னும் குறள் உரையில், “பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது (அறிவு)” என்று தெளிவுபடுத்தியபின், இந்த விளக்கத்திற்கு ஏற்றதொரு பெயரை எடுத்துக்காட்டித் தம் கருத்தை நிலை நாட்டுகின்றார். “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதோர் குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் சிறப்புப் பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றதோர் சிறப்புப் பெயரும் ஒரு பொருளின்கண் கற்பனை”. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (408) என்ற குறளுக்கு, “திரு கல்லாரைக் கெடுக்க வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலின் ‘வறுமையினும் திரு இன்னாது” என்றார் என்று நயவுரை எழுதியுள்ளார். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் (423) என்பதற்கு இவர் பின்வருமாறு சிறப்புரை எழுதுகின்றார். “குணங்கள் மூன்றும் மாறிமாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தோர் வாயினும் உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்றார்”. இன்மையின் இ்ன்மையே இன்னாதது (1041) என்பதை, “ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டா ஆயிற்று” என்று தெளிவுபடுத்துகின்றார். நன்றறிவாரின் கயவர் திருவுடையர் (1072) என்று கூறிய திருவள்ளுவரின் கருத்தைத் தெளிவாக விளக்குகின்றார். (புகழ், அறம், ஞானம் ஆகியவற்றை) “அறிவார் இவை செய்யா நின்றே மிகச் செயப் பெறுகின்றிலேம் என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறதலையாய பழிபாவம் அறியாமை என்பனவற்றுள் யாது |