என உலகியலை வியந்து கூறிற்றாக்குவாரும் உளர்” என்று உரைத்துள்ளார். சிவப்பிரகாசர் இக்கருத்தை, தாழ்ந்தோர் உயர்வர் என்றும்மிக்க உயர்ந்தோர் தாழ்வர் என்றும்அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில்சூழ் கிடந்ததொல் அகழி தாழ்ந்தோர் அனந்தன் மணிமுடிமேல் நின்றன்று உயர்ந்து தடவரையைச் சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன்தாள் கீழ்நின் றதுபோய்ச் சூழ்எயிலே (மாயை உற்பத்தி - 14) என்று பிரபுலிங்கலீலையில் உள்ள பாடலில் மேற்கொண்டுள்ளார். இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள (223) என்ற குறளுக்குப் பரிமேலழகர் பின்வருமாறு உரை எழுதுகின்றார். “யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் - இவை இரண்டும் உள ஆவன குடிப்பிறந்தான் கண்ணே” இக்கருத்தைச் சிவப்பிரகாசர், சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழில், ஒற்க இர வோர்கள் இல் எனப் புகல்வ தேநீ உற்று ஒருவர் பாலும் உளைவுற்று உரைசெய்யாதே நிற்க நனி ஈகைவினை பெற்றிடுகை யாலே நித்தம் அது கோறல்நின் இயற்கை (சிற்றில் - 9) என்ற பாடலில் கூறியுள்ளார். மேலே காட்டிய குறட்பா வுரையில் பரிமேலழகர், பிறர் உரையாக மூன்று கருத்துக்களைக் கூறுகின்றார். அம்மூன்று கருத்துக்களையும் சிவப்பிரகாசர் தம் பாடல்களில் எடுத்தாண்டுள்ளார். ‘அவ் இளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பு அறிந்து கொடுத்தல்’ என்பது முதல் கருத்து. இதனைச் சிவப்பிரகாசர், வெங்கை நகர் அண்ணாமலை ரெட்டியார் கொடைப் பண்பைக் கூறும் பாடலில், |