பக்கம் எண் :

411ஆய்வு

திருத்தமும் பொருத்தமும்

    அச்சு எழுத்தில், நூல் வடிவம் பெற்று நாடெங்கும் பயிலப்பட்டு வரும்
பரிமேலழகர் உரையில் திருத்தப்பட வேண்டிய பகுதிகள் சில உள்ளன
என்பதை ஆராய்ச்சியாளர் சிலர் எடுத்துக்காட்டியுள்ளனர். குறிப்புரை எழுதி
அந்நூலைப் பதிப்பித்தவர்களும், பல ஆண்டுகள் அவ்வுரையில் மூழ்கி
ஆழ்ந்து பயின்றவர்களும் கூறியுள்ள சில திருத்தங்கள் பொருத்தமாய்
உள்ளன. சில திருத்தங்கள் மேலும் சிந்திக்க இடம் உண்டு என்பதை
உணர்த்துகின்றன.
 1

1

     பிரயோக விவேக நூலாசிரியர், “அலங்கார நூலார் (சொற்களை)
அபிதை, இலக்கணம், வியஞ்சனாவியர்த்தி என மூன்று வகையாக்குவர்.
அவர் மதம் பற்றிப் பரிமேலழகரும் ‘சொல்லின் தொகை அறிந்த
தூய்மையவர்’ என்னும் திருவள்ளுவர் குறள் உரையில் (711) செஞ்சொல்
இலக்கணச் சொல் குறிப்புச்சொல் என்பர்” (திங்ஙுப்படலம் 16) என்று
கூறுகின்றார்.

     இன்று வெளிவந்துள்ள பரிமேலழகர் உரைகளில் “அவையறிந்து
ஆராய்ந்து சொல்லுக” (711) என்ற குறளின் விளக்கவுரையில் “சொல்லின்
குழு எனவே செஞ்சொல், இலக்கணச்சொல், குறிப்புச்சொல் என்னும்
மூவகைச் சொல்லும் அடங்கின” என்றே காணப்படுகின்றது. இலக்கணைச்
சொல் என்பது இலக்கணச்சொல் என்று இருக்க வேண்டும் என்று
தோன்றுகிறது.

2

     பரிமேலழகர் உரைக்கு விளக்கக் குறிப்புகள் எழுதிப் பதிப்பித்த (1946)
வை.மு.
கோபாலகிருஷ்ணமாச்சாரியர், பரிமேலழகர் உரையைப் பற்றி
விரிவாக ஆராய்ந்துள்ளார். அந்நூலின் முகவுரையில் ஒரு திருத்தம்
குறிப்பிடுகின்றார்.

     “துப்புர வில்லார்” என்னும் 1050ஆம் குறளுக்குப் பரிமேலழகர்
கூறியுள்ள விசேடவுரையில், ‘இனி முற்றத் துறத்தலாவது துப்புரவில்லாமையின்
ஒருவாற்றான் துறந்தாராயினார் பின் அவற்றை மனத்தால் துறவாமை’ என்றே
எல்லாப் பிரதிகளிலும் காணப்பட்டமையால் அங்ஙனமே பதிப்பித்துள்ளேன்.
அந்தப் பாடம் பொருளமைதிக்கு