பொருந்தாவுரை சில குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் பொருந்தாவுரையும் கூறியுள்ளார். இவருக்கு முற்பட்ட உரையாசிரியர்களின் உரையைக் கற்கும்போது வேறு பல பொருத்தமான கருத்துகள் வெளிப்படுகின்றன. 1 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது (235) என்ற குறளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை சிறப்பாக இல்லை. ‘நத்தம் போல்’ என்பது உவமைத் தொடர் போல உள்ளது. ஆனால் பரிமேலழகர், “நந்து என்னும் தொழிற்பெயர் விகாரத்தால் நத்து என்றாய், பின் அம் பகுதிப்பொருள் விகுதி பெற்று நத்தம் என்று ஆயிற்று. போல் என்பது ஈண்டு உரையசை ஆகும் என்பதை முன்னும் கூட்டி, அரிது என்பதனைத் தனித்தனிக்கூட்டி உரைக்க” என்றெல்லாம் எழுதுகின்றார். நத்தம் போல் என்பதற்குப் பரிதியார், “சங்கு ஆயிரம் சூழ்ந்த வலம்புரி போல” என்றும்; காலிங்கர், “வலம்புரிச் சங்கானது தன்னிலை குலைந்து பிறர் கைப்படினும் தன் பெருமை குன்றாததுபோல” என்றும் பொருள் கூறுகின்றனர். நத்தம் என்பதற்குச் சங்கு என்றும், போல் என்பதை உவம உருபாகவும் கொண்டு பொருள் எழுதியுள்ளனர். இவர் தரும் விளக்கமே குறளின் பொருளை அறியத் துணை செய்கின்றது. இக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை பொருந்த வில்லை என்று கூறி, சிறந்த விளக்கம் ஒன்றைத் தமிழறிஞர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை செந்தமிழ்ச் செல்வியில் “உரை மயக்கம்” என்ற கட்டுரையில் வெளியிட்டுள்ளார் (செந்தமிழ்ச் செல்வி - சிலம்பு 8 பக்கம் 4-10). அவர் தரும் விளக்கம் கீழேதரப்படுகிறது. “நத்தம் என்ற மொழிக்கு நத்தை, ஊர், சங்கு, வாழை, அனைய பொருள்கள் பல இருக்க ‘நந்து’ என்பதன் திரிபு ‘நத்து’ என்று ஆகி, அது அம் சாரியை பெற்று நத்தம் என்று ஆயிற்று என்றும், அதற்குப் பொருள் ஆக்கம், கேடு என்றும் உரைகாரர் (பரிமேலழகர்) கூறுவது வியப்பாய் இருக்கின்றது. நத்தை சங்கு வாழை என்ற பொருள்களை அமைத்து உரைவரையின் பொருள் எளிது விளங்குகின்றது. ‘நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங் காலமது கொண்ட கருவழிக்கும்’ என்றனர் ஆன்றோரும். இவற்றிற்கு அழிவு நேரிடும் பொழுது இவை கருக்கொள்ளும்; கரு |