காலிங்கர்: வெறுக்கை - செல்வம் (600). “வெறுக்கை என்பது செல்வம் என்றும், வெறுப்பு என்றும் சொல்லுவாரும் உளர்.” இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (41) பரிமேலழகர்: இயல்புடைய மூவர் பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்கிற மூவர். திரு.வி.க: பண்பு வாய்ந்த ஊர் மன்றத் தலைவராகிய மூவர்க்கும்: திருவள்ளுவர் மூவேந்தர் நினைவுடன் மூவர்க்கும் என்று குறித்திருக்கலாம். வ. உ. சி: இயல்பாக உடைய தாய், தந்தை, தாரம் என்னும் மூவர். குழந்தை: துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்னும் மூவர். நாமக்கல்லார்: உறவினர், நண்பர்கள், ஏழைகள் என்ற மூவர். உவமை இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100) பரிமேலழகர்: இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்தனோடு ஒக்கும். மணக்குடவர்: பழமும் காயும் ஓரிடத்தே இருக்கக் கண்டவன் பழத்தைக் கொள்ளாது காயைக்கொண்ட தன்மைத்து. பரிதியார்: நல்ல பழம் இருக்க வேப்பங்காயைத் தின்பதற்கு ஒக்கும். காலிங்கர்: நம் இல்லகத்து இனிய கனி உளவாய் இருப்பவன்காயைப் புறத்துச்சென்று நுகர்ந்து விரும்பினாற் போலும். 3. ஆய்வுரை திருவள்ளுவரின் உள்ளக் கருத்தை அறிய, கால இடைவெளியைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது: வாழும் இடத்தின் சுற்றுச்சூழலை - பழக்கவழக்கங்களைக் கடந்து சென்று கடந்த காலத்துடன் இணைய வேண்டியுள்ளது. திருவள்ளுவர் காலத்துச் சொற்களுக்குப் பொருளும், அவர் காலத்து மொழியமைப்பின் இயல்பும் அறிய வேண்டியுள்ளது. |