நல்லவர் வாழ்கின்ற நாட்டில், மழை தவறாமல் பெய்து வளங்கொழிக்கும் என்ற கருத்தை, பாரதக் கதை அறிவிக்கின்றது (நாடு கரந்துறை-37).* ஒளவை மூதாட்டி மூதுரையில் (10), நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பாடியுள்ளார். 2 மன்னவன் செங்கோல் தவறினால் மழைபெய்யாது என்ற கருத்து, காப்பியங்களில் உள்ளது. மணிமேகலை: கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூறும். (7:8, 9) வானம் மும்மாரி பொழிக; மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக. (1:33,34) சிலப்பதிகாரம் : செங்குட்டுவன் கூற்று: மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல். (25:100-104) சீவக சிந்தாமணி: கோள்நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி நீள்நீல மாரி இன்றி விளைவு அஃகி, பசியும் நீடி, பூண்முலை மகளி்ர் பொற்பின் கற்பழிந்து அறங்கள் மாறி ஆணைஇவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்றான். (253) * விராட பருவம் படித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடம் உள்ளது. |