பக்கம் எண் :

441ஆய்வு

மணக்குடவர்: ஒரு மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமாவைப் போன்ற
             மானமுடையார்,

      மானம் அழியவரின் உயிர் விடுவர்.

பரி்ப்பெருமாள்: ஒரு மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமாவைப் போன்ற
               மானமுடையார், அம் மானம் அழியவரின் உயிர் விடுவார்.

பரிதியார்: ஒரு மயிர் சிக்கினால் பிராணனைவிடும் கவரிமான் போல, மானம்           வந்தால் பிராணனையும் விடுவர் நல்லோர்.

காலிங்கர் : தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின்
           மானித்துப்பின் உயிர் வாழாது. அம் மயிர் துவக்குண்ட
           இடத்துநின்று, வற்றிவிடூஉம் கவரிமா அன்ன கட்டுப்பாடுடையார்
           தம் குடிமையின் சிறிது நீங்கி மானிப்பதோர் மானம் வந்துறின்
           அப்பொழுதே தம் உயிர் துறப்பர்.

     உரையாசிரியர்கள், குறட்பாவில் இல்லாத சில செய்திகளை வலிந்து
புகுத்தியுள்ளனர்:

     1. ‘கவரிமா’ என்று திருவள்ளுவர் கூறியதைக் ‘கவரிமான்’ என்று
கருதிவிட்டார், பரிதியார்.

     2. ‘மயிர்’ என்று திருவள்ளுவர் பொதுவாகவே கூறியுள்ளார். ஆனால்,
உரையாசிரியர்கள் ஒரு மயிர் என்ற கருதிவிட்டனர்.

     3. வாழா(த) கவரிமா - என்பதற்கு, ‘குளிர்தாங்க முடியாமல்
இறந்துபோகின்ற - வாழ முடியாத’ என்று கொள்ளாமல், ‘ஒரு மயிரை
இழந்த மானக்கேட்டால் அந்த இடத்திலேயே உயிர்விடுகின்ற’ என்று
பொருளுரைத்தனர்.

     4. கவரிமா, மானம் மிக உடைய விலங்கு என்று கருதினர்.

     இடைக்காலத்துப் புலவர்களும் இவ்வாறே கருதிவிட்டனர். திருத்தக்க
தேவர் ‘மானக்கவரி’ (சிந் - 2120) என்றார். கம்பர் ‘மானமா’ என்றார்.
பெருங்கதை (35, 233, 4),

    வான்மயிர் துடக்கின் தானுயிர் வாழாப்
    பெருந்தகைக் கவரி

என்று கூறியுள்ளது.

     5. தன் உடம்பில் உள்ள மயிரில் ஒன்றேனும் உதிராமல் வாழ்கின்ற
விலங்கு எதுவும் இருக்க முடியாது. (1) இயற்கையாகவே விலங்கின் மயிர்
உதிரும். (2) விலங்கு தன் உடம்பைத்தினவு போகத் தேய்த்துக் கொள்ளும்
போதும், வேறு விலங்கோ பொருளோ அதனை உராய்கின்ற போதோ
தடவிக் கொடுக்கும் போதோ