ஆகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச்சேர்க்கப்பட்டவை என்றும் யான் கருதுகின்றேன். அவ்வாறு யான் கருதுவதற்குரிய காரணங்களிற் சில: 1. இம்மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின் பாக்களைப்போல, சொற்செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல. 2. இப் பாக்களில், பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன. 3. மெய்யுணர்தல், துறவு என்றும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால், கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை என்னும் அதிகாரங்களைப் பாயிரத்தில் கூற வேண்டுவதில்லை. 4. மெய்யுணர்தலில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் இயற்றியவர் ஒருவர் அல்லர் என்பது நன்றாக விளங்கும். 5. அவ்வாறே துறவின் பாக்களையும் நீத்தார் பெருமையின் பாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவர் அல்லர் என்பது நன்றாக விளங்கும். 6. மழையை, ‘சிறப்பின் தணிப்பாரும் இல்லை; வறப்பின் தருவாரும் இல்’ ஆகையால் வான் சிறப்பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.” -வ.உ.சி: திருக்குறள் (அறத்துப்பால்) விருத்தியுரை. - முன்னுரை (1935). இவ்வாறு கூறுகின்ற வ.உ.சி. ‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தைப் பற்றி ஐயப்படவில்லை. அதனை, அறத்துப் பாலின் முதல் அதிகாரமாகக்கொண்டு நூலைத்தொடங்கி விளக்கவுரை எழுதிச் செல்கின்றார். ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் பாயிரத்தில் உள்ள ‘கடவுள் வாழ்த்து’ மற்ற நூலின் கடவுள் வாழ்த்துப்போல இல்லாமல், வேறுபட்ட அமைப்புடையது என்று, ச. தண்டபாணி தேசிகர் கூறுகின்றார்: “இந் நூல் கடவுள் வாழ்த்திற்கும், ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில், எடுத்துக்கொண்ட நூல், இனிது நிறைவேறுதற் பொருட்டும், நின்று நிலவுதற் பொருட்டும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந் |