பக்கம் எண் :

உரையாசிரியர்கள்454

பிறந்த விசய மங்கலத்தின் பக்கத்தில் உள்ளதென்றும் கொங்குமண்டல
சதகம் தெரிவிக்கின்றது” என்பர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். நிரம்பை
என்னும் ஊர் இன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெருந்துறையை
அடுத்து உள்ளது.

     ஆ. முத்துத்தம்பி பிள்ளை என்பவர், “அடியார்க்கு நல்லார்,
குணபூஷண சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி (14 நூற்) என்னும் ஈழ
நாட்டரசர்க்கு அமைச்சர்” என்று கூறியுள்ளார் (செந்தமிழ்-12, பக்-379).

     தமிழகத்தில்-பல்குன்றக் கோட்டத்துச் சிங்கம் பொருத வளநாட்டு,
தேனூரில் இவர் பிறந்தவர் என்றும், இதற்கு ஆதாரமாகக் காஞ்சிபுரக்
கல்வெட்டு ஒன்று உள்ளது்என்றும் கூறுகின்றனர் (செங்குந்தர் பிரபந்தத்
திரட்டு-முகவுரை, பக்-38, 39).

     அடியார்க்குநல்லாரை ஆதரித்த வள்ளல் ‘பொப்பண்ண காங்கெயர்
கோன்’ என்று சிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்று கூறுகின்றது. அவ்வள்ளல்
‘காலமெனும் கூற்றைத் தவிர்த்தருள்  பொப்பண்ண காங்கெயர் கோன்’
என்று புகழப்படுகின்றான். அடியார்க்கு நல்லார்க்குப் பொப்பண்ணன்
“அளித்த சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே”
என்று இலக்கியச் சுவை தோன்ற அவ் வள்ளலின் உதவி புகழ்ப்படுகின்றது.
‘சோற்றுச் செருக்கு’ என்ற சொற்றொடர் நினைக்க நினைக்கப் பெரிதும்
சுவையூட்டுகின்றது. சோற்றுச் செருக்கு, தமிழ் மூன்றினுக்கும் உரை
சொல்வித்ததாய்க் கூறியிருப்பதுமிக்க நயமாய் உள்ளது.

     இராமானுசர், போசள விஷ்ணுவர்த்தன மகாராசர் என்ற மன்னனை
வைணவ சமயத்தில் சேர்த்தார். அம்மன்னனின் அமைச்சனும்
படைத்தலைவனுமாக இருந்தவன் பொப்பண்ண காங்கேயன். அவன் சமண
சமயத்தவன். அவன் காலம் 12ஆம் நூற்றாண்டு. அடியார்க்கு நல்லார்
அக்காலத்தவரே என்பர். அடியார்க்கு நல்லார் பதிகத்தின் உரையில்
காட்டப்பெறும் “மக்கள் இழந்த இடும்பையனும்” என்ற (இராமாயண) உத்தர
காண்டப் பாடல் இக் காலத்திற்கு முன் தோன்றியது என்றும் கூறுவர். இவர்
கலிகத்துப் பரணியிலிருந்து சில செய்யுட்களை மேற்கோள் காட்டுவதால்
இவர் சயங்கொண்டார் காலத்திற்கும் பின் வாழ்ந்தவர் எனலாம்.

     திருஞானசம்பந்தர் தம் தேவராப் பாடலில், “கண்ணுளார்
கருவூருளான்நிலை அண்ணலார் அடியார்க்கு நல்லரே” என்று
சிவபெருமானை ‘அடியார்க்கு நல்லார்’ என்ற பெயரால் அழைக்கின்றார்.
அப்பெயரைத் தாங்கிய இவ்வுரையாசிரியர் சைவ