வளங்களைப்பற்றி எத்தனையோ அரிய கருத்துகள் வெளிப்பட்டன. இவர் தரும் ஒளியில் தான் பழந்தமிழ்க் கலைகள் நன்கு தெரிகின்றன. இவருடைய நடை எதுகை மோனைகள் நிரம்பி, இனிய ஓசையுடன் கவிதைபோல் அமைந்துள்ளது. ஒவ்வொரு காதையிலும் முன்பின் நிகழ்ச்சிகளைச் சுட்டி விளக்குவது இவரது இயல்பு. மூலத்தின் திசைச்சொல் வந்தால் அதனை ஆராய்ந்து கூறுகின்றார். பழமொழிகள் இடம்பெறின் அவற்றை விளக்குகின்றார். உரைப்பாயிரம், பதிகத்தின் உரை ஆகியவற்றில் காப்பியம்பற்றி ஆராய்ந்து கூறும் கருத்துகள் போற்றத்தக்கவை. ஒவ்வொரு காதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பொழிப்புரை தந்து, அதன் கீழே அருஞ்சொற்பொருள், விளக்கம், நயம், மேற்கோள், இலக்கணம் ஆகியவற்றைத் தருகின்றார். அணிகளையும் மெய்ப்பாடுகளையும் மற்றக் கலைகளையும் வெளிப்படுத்துகின்றார். ஒவ்வொரு காதையின் முடிவிலும் இஃது இன்ன செய்யுள் என்று ஆராய்ந்து எழுதுகின்றார்; வினைமுடிபுகளை மறவாமல் முடித்துக் காட்டுகின்றார்; மேற்கோள் தரும் நூலைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். டாக்டர். ச.வே. சுப்பிரமணியனார், ‘அடியார்க்கு நல்லார் உரைத்திறன்’ என்னும் சிறந்த ஆராய்ச்சி நூலில் மிக விரிவாக, இவரது உரை நலன்களை எல்லாம் திறனாய்வு முறையில் வெளிப்படுத்தியுள்ளார். மறைந்த பகுதி அடியார்க்குநல்லார் உரை, ‘ஊர்சூழ்வரி’ என்ற பகுதி வரையில்தான் உள்ளது. நடுவே கானல்வரிக்கு உரை இல்லை. இவர் மதுரைக் காண்டம் முழுமைக்கும் உரை கண்டுள்ளார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அரகேற்று காதையில் (3:13, 26) இரண்டு இடங்களில், “கானல் வரியில் கூறுதும்’ என்கின்றார். அக் காதையில் (3:107) ஓரிடத்தில் “அழற்படு காதைக் கண்ணே விரித்துக் கூறுதும்” என்கிறார். வேனிற் காதையில் (58-9), “கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்” என்று உரைக்கின்றார். எனவே, இவர் மதுரைக் காண்டம் வரை உரை இயற்றினார் என்பது விளங்கும். வஞ்சிக் காண்டத்திற்கும் உரை இயற்றி இருக்க வேண்டும். அவை இன்று கிடைக்கவில்லை. காலம் கடந்த குரல் தமிழிலக்கிய உலகில், இசை நாடகங்களைப்பற்றி வேறு எவரும் அடியார்க்கு நல்லாரைப் போல் அரிய பெரிய விளக் |