கங்கள் எழுதவில்லை. கணக்கற்ற நூல்களைக் கற்றுத் தெளிந்து இவர் தமிழ்க் கலைகளை விளக்குகின்றார். முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் இசை நாடகக் கலைகளைப்பற்றிக் கூறும் கருத்துகள் மிகவும் அருமையானவை; பிற தமிழ் நூல்களில் இல்லாதவை. அவற்றிற்கெல்லாம் அடியார்க்குநல்லார் எழுதியுள்ள உரையும் விளக்கமும் காட்டியுள்ள மேற்கோளும் மூலத்தைவிட அரியவை; விளக்கமானவை. இவர், தமிழ்க்கலைகளின் மாண்பைப் போற்றி விளக்கி உரைத்த குரல், காலங்கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு இவர் உரையே பெரிதும் உதவியது. தமிழ்க் கலைகளைப் பல நூற்றாண்டுகளாகக் காத்து வழங்கிய பெருமை இவ்வுரைக்கு உண்டு. அபிரகாம் பண்டிதர் இயற்றிய கருணாமிர்த சாகரமும் விபுலானந்தர் இயற்றிய யாழ்நூலும் அவற்றிக்குப்பின் தமிழிசை பற்றி எழுந்த பல நூல்களும் அடியார்க்குநல்லார் உரையிலிருந்து கிளைத்தவையே. தமிழர்க்கு என்று தனியாக இசை உண்டு என்று பெருமைப்படவும், அதன் பழமையை எடுத்துக்கூறவும், தமிழிசை உணர்ச்சி பெற்றுப்பரப்பவும், விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடவும் இவர் உரையே உறுதுணை புரிந்துவருகின்றது. திறனாய்வுக் கலைஞர் மேல்நாட்டுத் திறனாய்வாளரைப்போல, இவர் சிலப்பதிகாரத்தைப் பலவேறு கோணங்களில் ஆராய்ந்துள்ளார். காப்பிய அமைப்பு, கதையின் கட்டுக்கோப்பு, நிகழ்ச்சி ஒருமைப்பாடு, காப்பிய மாந்தரின் பண்புகள், நூலாசிரியரின் ஆழ்ந்திருக்கும் கவியுளம், செயல் நிகழும் கால எல்லை, இடம் ஆகியவற்றை எல்லாம் அடியார்க்கு நல்லார் நுணுகி நோக்கி ஆராய்ந்து திறம்படக் கூறுகின்றார். காப்பியம், தொடர்நிலைச் செய்யுள் என்ற இரு சொற்களின் பொருத்தத்தை உரைப் பாயிரத்தில் ஆய்ந்து கூறுகின்றார். “முந்து நூல்களில் காப்பியம் என்னும் வடமொழிப் பெயர் இன்றேனும்...நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் (19:80) என மணிமேகலையுள்ளும் பிறவற்றுள்ளும் கூறினமையானும், சொற்றொடர் நிலை பொருட்டொடர் நிலை என்னும் தொடர் |