வேட்டுவ வரியில், இட்டுத் தலைஎண்ணும் எயினர் அல்லது சுட்டுத்தலை போகாத் தொல்குடி (20-21) என்ற இரு அடிகளுக்கு மூன்று வகையாகப் பொருள் கூறியுள்ளார்: 1. “தாம் சுட்டிய பகைஞர் தலையைத் தாமே அறுத்திட்டு எண்ணுவது அல்லது. பகைஞர் சுட்டி எண்ணுதல் அவரிடத்து முடிவு போகாமைக்குக் காரணமாகிய எயினர் தொல்குடி. 2. தலைகள் அரிந்துவைக்க வைக்கப் பிறர் எண்ணப்படுவது அல்லது, ஈமத்திற் சுடப்பட்டு அவம் போகாக்குடி. 3. அரசன் சுட்டிய மாற்றரசர் தலையைப் பிறரிடத்துப் போகவிடாக்குடி.” ஊர்காண் காதையில், நுதல்விழி நாட்டத்து இறையோன் (7) என்ற அடிக்கும் பின்வருமாறு மூன்று பொருள் உரைக்கின்றார்: 1. இறைவி கண் புதைத்தபொழுது நெற்றியில் புறப்பட விட்ட கண்ணையுடைய இறைவன். 2. நுதலின் இமையா நாட்டம் 3. காமனை விழித்த நாட்டம். புறஞ்சேரி இறுத்த காதையில், கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும், தையலும் கணவனும் தனித்துறு துயரம் ஐய மின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந்தினைந்து ஏங்கி, கண்ணீர் கொண்டு காலுற நடுங்க (184-188) என்ற பகுதியில் கண்ணீர் கொண்டு, காலுற நடுங்க என்ற சொற்கள் இருபொருள்படும்படி அமைந்துள்ளன. அடியார்க்கு நல்லார் இரு பொருளும் தருகின்றார். “கண்ணீ்ரைக் கொண்டு காலுற நடுங்கா நிற்க” என்றும்; “கண்ணீர்-கள்ளாகிய நீர் எனவுமாம். காலுற - காலிலேஉற எனவும், காற்று உறுதலால் எனவும் ஆம்” என்றும் இருவேறு பொருளைத் தருகின்றார். சொல்லும் பொருளும் அடியார்க்கு நல்லார், சொற்களுக்குச் சிறந்த பொருள் உரைக்கின்றார். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம். |