பக்கம் எண் :

473ஆய்வு

என்பது அணியியலாகலின்’ என்று உரைக்கின்றார். இங்கே அணியியல்
என்று இவர் குறிப்பிடும் சூத்திரம் தண்டியலங்காரத்தில் (பொது21) உள்ளது.
இவர் காலத்தில் தண்டியலங்காரத்திற்கு அணியியல் என்ற ஒரு நூல் இருந்து
அதிலுள்ள சூத்திரங்களைத் தண்டியலங்காரம் எடுத்துக் கொண்டது என்பதா?
இவ் வினாக்களுக்குத் தக்க விடை காண இயலவில்லை.

     இந்திரவிழவூர் எடுத்த காதையில் (16-98) பல இடங்களில்
கலிங்கத்துப் பரணிச் செய்யுள்களை இவர் மேற்கோள் காட்டுகின்றார். ‘நீண்ட
பலிபீடத்தில்’ என்றதாழிசையை (கலிங். கோயில். 16) மேற்கோள் காட்டி
‘என்றாற் போல் வரும் விருத்தச் செய்யுள்’ என்கின்றார்.

    மோடி முன்றலையை வைப்பரே
         முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
    ஆடிநின்றுகுரு திப்பு துத்திலதம்
         அம்முகத்தில் அமைப்பரே

என்பது கவிச்சக்கர விருத்தி என்று கூறுகின்றார். இச் செய்யுள் கலிங்கத்துப்
பரணியில் இல்லை. கவிச்சக்கரவிருத்திச் செய்யுள் என்று கலிங்கத்துப்
பரணிச் செய்யுளை இவர் கூறுவதேன்? மேலே கண்ட செய்யுள்
கவிச்சக்கரவிருத்தியைச் சேர்ந்ததா? இத்தகைய கேள்விகளுக்கு வருங்காலம்
விடை கூறும்.

     ‘அடிக்கழுத்தின்’ என்ற கலிங்கத்துப் பரணிச் செய்யுளையும் (கலிங்.
கோயில் 15) மேற்கோள் காட்டுகின்றார்.

     கலிங்கத்துப் பரணி மேற்கோள் பாடல்கள் அடியார்க்கு நல்லார்
காலத்தை அறியத் துணைபுரிகின்றன.

     வேனிற் காதையின் தொடக்கத்தில் மூன்று தமிழ்ச் சங்கத்தின் வரலாறு,
கடல் கொண்ட தொடக்கத்தில் இருந்த நாடுகளின் பெயர் ஆகியவற்றை மிக
விரிவாகக் கூறுகின்றார். மேலும், அதனைத் தொடர்ந்து, இஃது என்னைப்
பெறுமாறு எனின், கணக்காயனார் உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்
முகவுரையானும் பிறவற்றானும் பெறுதும்’ என்று உரைக்கின்றார்.

     இவ்வுரைப் பகுதியால் உரையாசிரியர் என்பவர் இளம்பூரணரே
என்ற உண்மையும் அவர் ஒரு துறவி (அடிகள்) என்ற செய்தியும்
வெளிப்படுகின்றன. இளம்பூரணர் எந்த நூலின் முகவுரையில் இவ்வாறு
கூறினார் என்பது புலனாகவில்லை. இன்று அச்சாகியுள்ள தொல்காப்பியம்
இளம்பூரணர் உரையின் முகவுரையில் முச்சங்க வரலாறோ, தென்னாடு
கடல்கொண்ட