ஆளவந்தார் விருப்பங்கள் இளமைக் காலத்தில் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த இராமானுசர் யாதவப் பிரகாசரிடம் வேதாந்த நூல்களைக் கற்றறிந்தார். இவரது கல்விச் சிறப்பையும் நுண்ணறிவையும் கேள்விப்பட்ட ஆளவந்தார் திருவரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார். இவரைக் கண்டு உரையாடி மகிழ்ந்தார். பிற்காலத்தில் இராமானுசரே வைணவ சமயக் காவலராய் விளங்கி அரிய பெரிய செயல்களை ஆற்றப் போகிறார் என்று அறிந்து கொண்டார். தம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, தம் இருப்பிடம் சென்று சேர்ந்தார். சில நாட்கள் கழித்தபி்ன் ஆளவந்தார் நோயுற்றிருக்கும் செய்தி அறிந்து இராமானுசர் அவரைக் காணச் சென்றார். காஞ்சிபுரத்திலிருந்து திருவரங்கம் சென்று சேர்வதற்குள் ஆளவந்தார் இறந்து விட்டார். ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தபின், இராமானுசர் திருவரங்கம் வந்து அவர் உடலைக் கண்டபோது, கை விரல்கள் மூன்று மட்டும் மடங்கி இருக்கக் கண்டார். அவை, ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று விருப்பங்களைக் காட்டும் அடையாளம் என்ற ஆளவந்தாரின் சீடர்கள் கூறினர். அவை: 1. நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு விளக்கவுரை எழுத வேண்டும். 2. வியாச சூத்திரத்திற்கு விசிட்டாத்துவைதபரமாக ஒரு விரிவுரை எழுத வேண்டும். 3. வியாசபராசரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நல்லதொரு பணியைச் செய்ய வேண்டும். இந்த மூன்று விருப்பங்களையும் தாம் நிறைவேற்றுவதாக இராமாநுசர் வாக்களித்தவுடன் மூடி இருந்த (ஆளவந்தார்) விரல்கள் மூன்றும் விரிந்தன. பின்னர்த் தம் சீடராகிய பிள்ளானைக் கொண்டு திருவாய் மொழிக்கு வியாக்கியானம் செய்வித்தார். மற்றொரு சீடரான பராசர பட்டரைக் கொண்டு சகஸ்ர நாம பாஷ்யம் செய்வித்தார். காஷ்மீரம் வரை சென்று வடமொழி பயின்று தேர்ந்தபின், தாமே வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் செய்தார். தமிழ் நாட்டில் உள்ள திருவரங்கத்தில் - ‘கோயில்’ என்ற பெருஞ் சிறப்புடைய வைணவ தலத்தில் வாழ்ந்து கொண்டு ஆழ்வார்களின் பாடல்களைப் பெரிதும் போற்றிக் கொண்டாடிய இவர், தாம் எழுதிய பாஷ்யங்கள் அனைத்தையும் வட * பார்க்க பிற்சேர்க்கை - 4. |