பக்கம் எண் :

5

முதற்பதிப்பின் பதிப்புரை

     செந்தமிழ் மொழியின் சிறப்புகள் பல. அவற்றுள் பேரிலக்கியங்கைளயும்
அவைகளுக்குச் சிறந்த உரைகளையும் பெற்றிருப்பது ஒப்பில்லாத தனிச்சிறப்பு
ஆகும். பேரிலக்கியங்களுக்குச் சீர்சான்ற உரை எழுதிய அறிஞர்களது அறிவு
நலங்களை வெளிக்கொணர எண்ணி உரை யாசிரியர்கள் என்னும் இந்நூலை
வெளியிட விரும்பினோம். படைப்பாற்றல் மிக்க நூலாசிரியர்களை ஒத்த
திறனும், மூல நூலைச் சிதைவுறாமல் காப்பாற்றிய திருப்பணியும்
உரையாசிரியர்களுக்கு உரியன. இலக்கிய நூல்களைச் சிறந்த முறையில்
அனுபவிப்பதற்கு இவ்வுரையாசிரியர்கள் உறுதுணையாக அமைந்த வரலாறும்,
நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற புலமை வீறு வாய்ந்த
உரையாசிரியர்கள் தமிழுக்குச் செய்த அளப்பரிய தொண்டுகளும் இந் நூலில்
விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இத் துறையில் இதுவே விரிவான முதல்
ஆராய்ச்சி நூலாகும். இந்நூல், தமிழ் இலக்கியங்களின் பெருமையை மேலும்
ஒருபடி உயரச் செய்யும் என்பது எங்கள் நம்பிக்கை.

     இந் நூலினைத் திரு. மு. வை. அரவிந்தன் எழுதியுள்ளார். இவர், இந்
நூலினை எழுதுவதற்கு எல்லா வகையானும் தகுதி வாய்ந்தவர்: ஆராய்ச்சி
வன்மையும் சிந்தனைத் தெளிவும் உடையவர். இவருடைய அயரா உழைப்பு
இந் நூலினை வளமுடைய தாக்கியுள்ளது.

     இந் நூலால் தமிழுக்கு நல்லதோர் இலக்கியச் செல்வம் கிடைத்தது
எனப் பெருமைப்படுகின்றோம். தமிழ் இலக்கிய வரலாறு ஒளிபெறுதற்கு
இன்றியமையாத நூல்களை வெளியிடுதல் எங்களின் நோக்கம் ஆகும்.
இத்துறையில் எங்கள் சிற்றிலக்கியச்செல்வ வரிசை எதிர்பார்த்த அளவு
வெற்றி பெற்றிருக்கிறது. இதனை அடுத்து ‘உரையாசிரியர்கள்’ என்னும்
இப்பெரு நூலினைத் தமிழ் ஆராய்ச்சியில் நாட்டம் பெருகிவரும்