அறிஞர்களுக்குள் நடந்தது. திருமயிலைச் சண்முகம் பிள்ளை, சோழவந்தான் அரசன் சண்முகனார், மறைமலையடிகள் முதலிய அறிஞர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்த ஆராய்ச்சியைப்பற்றி எழுதிய கட்டுரைகள் ஞான போதினி, செந்தமிழ், ஞான சாகரம் ஆகிய இதழ்களில் இடம் பெற்றுள்ளன. கலித்தொகை - நாடகம் கலித்தொகை முதலிய அகப்பொருள் நூல்களில் நாடகப் பண்பு வாய்ந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கலிப்படாலும் ஓரங்க நாடகம் ஆகும். இதனைச் சிவஞான முனிவர் மிகத் தெளிவாக உணர்ந்து விளக்குகின்றார். “பொருளதிகாரத்துக் கூறும் பொருளாவது, பெரும்பாலும் காமச் சுவையும் வீரச் சுவையும்பற்றி யோனி என்னும் உறுப்புத் தழுவி நாடக வழக்கோடு ஒத்துவரும் புலநெறி வழக்கு ஆகலின் அது நாடகத் தமிழுள் ....ஓதற்பாலதாயினும், கலித்தொகை முதலிய செய்யுள் ஆராய்ச்சிக்கும் இன்றியமையாது வேண்டப்படுதலின், அதுபற்றி இயற்றமிழ் மொழியின் ஒழிபாய்க் கொண்டு ஈண்டைக்கு வேண்டும் துணையே ஓதினார்” (பாயிர விருத்தி). நோக்கு சிவஞான முனிவர், நன்னூலில் சில நூற்பாக்களுக்கு நுண்பொருளும் விளக்கமும் எழுதுகின்றார். ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து நோக்கி பொருள் கூறுகின்றார். ஒருவர் என்பது உயர்இரு பாற்றாய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப (நன். 289) என்ற நூற்பாவில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த பொருள் இருப்பதைப் பின்வருமாறு விளக்குகின்றார். 1. “(ஒருவர்) இச் சொல்லின்கண் பகுதிக்கு ஏற்ப இருபாற்றாய் என்றும்; 2. விகுதிக்கு ஏற்ப பன்மைவினைகொளும் என்றும்; 3. உயர்திணை முப்பாலுள் பன்மையைப் பின்விதத்தலின் ஆண் பெண் என விதவாது உயர் இருபாற்றாய் என்றும்; 4. உயர் என, முன் விதத்தலின் உயர்திணைப்பன்மை என விதவாது பன்மை என்றும்; 5. ஒருவர் வந்தார், ஒருவர் அவர் என வினையும் பெயரும் கொள வருவது உவப்பு உயர்வு முதலியவற்றான் வருவதாம்; இங்ஙனம் தன்னியல்பாய் வரும் ஒருவர் என்பது வினையும் |