புறநடை உணர்த்துதல் நுதலிற்று” என்றும், “இவ்வாறே மேல்வரும் அதிகாரங்களி்லும் கண்டு கொள்க” என்றும் குறிப்பிடுகின்றார். பொதுப்பாயிரம் செய்தவர் யார்? மயிலைநாதரின் உரைப்போக்கு நன்னூலில் உள்ள பொதுப்பாயிரம் செய்தவர் யார் என்ற வினாவை எழுப்பி விடுகின்றது, 1 தொல்காப்பியம், இறையனார் களவியல் போன்ற நன்னூலுக்கு முற்பட்ட நூல்களில், பொதுப்பாயிரம் நூலாசிரியர் செய்ததாகக் காணப்படவில்லை. அந் நூல்களின் உரையாசிரியர்களே, சிறப்புப் பாயிரத்தின் உரைக்கு முன், பொதுப்பாயிரக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். மயிலை நாதரும் அவ்வாறே சிறப்புப்பாயிரத்திற்குப்பின் பாயிரச் சூத்திரங்களை அமைத்து உரையும் விளக்கமம் எழுதுகின்றார். 2 மயிலைநாதர், பொதுப்பாயிரச் சூத்திரங்கள் இரண்டினை (51, 52) ‘பனம்பாரம்’ நூலிலிருந்து மேற்கொண்டனர் என்கிறார். 3 மயிலைநாதருக்குப் பிற்பட்ட நன்னூல் உரையாசிரியர்கள் பாயிரத்துள் சேர்த்துக் கூறிய ‘முன்னோர் மொழி பொருளேயன்றி’ என்ற வெண்பாவை, மயிலைநாதர் தம் உரை விளக்கத்திற்குரிய மேற்கோளாகக் காட்டுகின்றார் (8). இவற்றால் பொதுப்பாயிரம், நன்னூலாரால் இயற்றப்பட்டது என்ற கருத்து வலிமையிழந்து விடுகின்றது. தொல்காப்பயிரை மறுத்தல் சகரம் மொழிக்கு முதலில் வராது என்பதும், குற்றியலுகரம் மொழிக்கு முதலிலும் வரும் என்பதும் தொல்காப்பயிர் கருத்து. இக் கருத்துகள் மயிலைநாதருக்கு மாறுபட்டவை. தொல்காப்பியரை மிக நாகரிகமாக இவர் மறுத்துள்ளார். வெளிப்படையாக மறுக்காமல் பின்வருமாறு நயம்படக் கூறுகின்றார்: சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும் வந்தனவால் சம்முதலும் வை. |