பக்கம் எண் :

உரையாசிரியர்கள்566

    நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறும்
    தன்னடித் தாமரை தந்துஎனை ஆண்ட
    கருணையங் கடலைஎன் கண்ணைவிட்டு அகலாச்
    சுவாமி நாத குரவனை அனுதினம்
    மனமொழி மெய்களில் தொழுது

என்று போற்றுகின்றார்.

     “சாமிநாத தேசிகர் மட்டுமன்றி இலக்கண விளக்கம் வைத்தியநாத
தேசிகர் முதலியோரும் அவரைப்போன்ற வேறு சில பெரியாரும் இவர்
காலத்தில் திருநெல்வேலியில் இருந்தவர்கள் ஆதலின், கல்வி கேள்விகளில்
சிறந்த ஓர் இலக்கண நூலுக்கு உரை இயற்றுதற்குப் போதிய ஆற்றலைப்
பெறுவது இவருக்கு எளிதாயிற்று” என்பர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

     சங்கரநமச்சிவாயர் நன்னூலுக்கு உரை இயற்றக் காரணமாய் இருந்தவர்,
ஊற்றுமலை சமீன்தாராகிய மருதப்ப தேவர். உரைப்பாயிரத்துள்
சங்கரநமச்சிவாயர் ஊற்றுமலை மருதப்பரை,

    பொன்மலை எனஇப் புவிபுகழ் பெருமை
    மன்னிய ஊற்று மலைமரு தப்பன்
    முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும்
    இத்தலத்து எய்திய இறைமகன்

என்று போற்றுகின்றார். மருதப்பர் கூற, தாம் உரை இயற்றிய வரலாற்றை,

    ...ஊற்றுமலை மருதப்பன்
    ‘நன்னூற்கு உரைநீ நவையறச் செய்து
    பன்னூற் புலவர்முன் பகர்தி’என்று இயம்பலின்,
    நன்நா வலர்முக நகைநா ணாமே
    என்னால் இயன்றவை இயற்றும் இந்நூலுள்

என்று உரைக்கின்றார்.

     சங்கரநமச்சிவாயர் உரை எழுதிக் கொண்டிருக்கும் போது மருதப்பர்
வேண்டிய உதவிகளைச் செய்து தந்து, உரையை அரங்கேற்றிப் பரிசு நல்கிச்
சிறப்பித்தார்.

     சங்கர நமச்சிவாயர் சைவர் ஆதலின், இவரது உரை முழுதும்
சைவமணம் கமழ்கின்றது. மேற்கோள்களும், எடுத்துக்காட்டும் சைவ சமயச்
சார்பானவையாகும்.

உரைத்திறன்

    சங்கர நமச்சிவாயரின் உரைத் திறனை வெளிப்படுத்தும் சிறந்த பகுதிகள்
பல உள்ளன.