பரத்தையிற் பிரிதல் - வைகலும் பாலே நுகர்வான் ஒருவன் இடையே புளியங்காடியும் நுகர்ந்து அதன் இனிமை அறிந்தாற்போல, அவள் நுகர்ச்சி இனிமை அறிதற்குப் புறப்பெண்டிர்மாட்டுப் பிரியா நிற்றல், அல்லதூஉம் பண்ணும் பாடலும் முதலாயின காட்டி, புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்கும் தலைவன் ஆகலின் அவர்க்கும் இன்பம் செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம். உவமை கூறல் பேராசிரியர் தம் கருத்தை விளக்க, ஏற்ற இனிய உவமைகள் பலவற்றைத் தம் உரைகளில் கூறியுள்ளார். அவற்றுள் சிலவற்றைக் காண்போம். ஓர் ஆவிற்கு இருகோடு தோன்றினாற் போல (1). ஓரிடத்து ஒரு கலியாணம் உண்டானால் எல்லாரிடத்தும் உண்டாகிய ஆபரணங்கள் எல்லாம் அவ்விடத்துக்கூடி, அக் கலியாணத்தைச் சிறப்பித்தாற்போல (1). புதல்வனது பிணிக்கு, தாய் மருந்துண்டாற்போல (118). சொற்பொருள் கூறல் அரிய சொற்களுக்குப் பேராசிரியர் தரும் விளக்கங்கள் அருமையானவை. சில விளக்கங்களைக் கீழே காண்போம்: விதி - செயப்படும் வினையினது நியதி (7). துறவு துறவி என நின்றாற்போல அளவு அளவி என நின்றது (8). கண்ணன் என்பது, கரியோன் என்னும் பொருளதோர் பாகதச் சிதைவு (53). இரதம் என்றது நாட்டியச் சுவையையன்று, கட்க இனிமையை. நடம் என்றது நாட்டியத்தையன்று. கூத்து என்னும் பொதுமையை (57). வஞ்சித்தல் - மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது பிறிதொன்றாகக் கூறுதல் (86). குதலைமை - விளங்காமை. மழலை - இளஞ்சொல் (104). சோத்தம் - இழிந்தார் செய்யுள் அஞ்சலி; அது சோத்து எனக் கடை குறைந்து நின்றது (173). போது - பேரரும்பு (174)1. 1. பரிமேலழகர் உரை. |