இராமனைப் பெற்றவள் ஆதலால், தேவர்கள் வந்தனை செய்கிறார்கள் என்று தெரிவிக்க அவ்வாறு விசேடித்துக் கூறினான் என்க. 3. இன்னும் ‘இவர் ஆர்?’ என்ற வினாவுக்குச் சக்கரவர்த்தியாகிய தசரதனுக்கு முதல் மனைவி, திருமாலாகிய இராமனுக்கு மாதா என்று கூறியுள்ளதன்மேல், இராமனைப் பெற்றதால் பெறும் செல்வம், யான் பிறத்தலால் துறந்த பெரியாள்’ என்று பரதன் ஏன் கூறினான் எனில், அவன் மேற்கூறிய விடைகளை அளிக்கும்போது, கோசலா தேவி முன்னிருந்த ஆனந்த நிலையும் இப்போதுள்ள துக்க நிலையும் அவன் மனத்தில் இயல்பாகத் தோன்றி வருத்தம் செய்து, ‘ஐயோ நான் ஒரு பாவி பிறவாதிருந்தால், இவ் அன்னையாருடைய ஆனந்த நிலை மாறியிராதே!’ என்ற எண்ணம் தோன்ற அதனை அவசனாய் வெளியிட்டுக் கூறினான் என்க. 4. இனி, பரதன் தான் பிறந்ததனால் கோசலாதேவி செல்வத்தை இழந்தாள் என்றது, தான் பிறக்கவில்லையானால், தனக்காகத் தன் தாய், தசரதன் இராமனுக்குத் கொடுத்த இராச்சியத்தைப் பிடுங்கிக் கொண்டு இராமனைக் காட்டுக்கு ஓட்டி இராள் என்றும், அவள் அவ்வாறு செய்யாதிருக்கவே கோசலாதேவி தசரதன் இறவாதிருக்கும் மாங்கலிய பாக்கியத்தையும், இராமன் முடி சூடி ஆளும் இராச்சியச் செல்வத்தையும் இழந்திராள் என்பதையும் குறிப்பித்தது”, இவ்வாறு ஒரு பாடல் தந்த விளக்கம், மற்றப்பாடல்களுக்கும் விளக்கம் காணத் தூண்டுதலாய் அமைந்துள்ளது. தேர்ந்தெடுத்துப் பல பாடல்களுக்கு உரையும் விளக்கமும் நயமும் இவர் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் - ஆராய்ச்சித் துறையிலிருந்து வெளி வந்திருக்கும் கம்பராமாயண உரைகள் திருத்தமானவை; கம்பரையும் வால்மீகரையும் ஒப்பிட்டு நோக்குபவை: விரிவான ஆராய்ச்சியும் நயமும் கூறுபவை; கம்பனின் புலமைத் திறனைத் தமிழுலகிற்கு அறிவிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. கம்பராமாயணத்தைத் தேவார திருவாசகங்களுடன் ஒப்பிட்டும், கம்பனின் சங்கநூற் புலமையை எடுத்துக்காட்டியும் செல்வது குறிப்பிடத் தக்கதாகும். 8. புராண இதிகாச உரைகள் தமிழ்மொழியில் இராமாயணக் கதையும் பாரதக் கதையும் பல்லவர் காலத்திலேயே (600-900) நூல் வடிவில் மக்களிடையே |