யாப்பருங்கல விருத்தியுரை, எட்டாரைச் சக்கரச் செய்யுளில் குறிக்கப்படும் பல்லவ மன்னன் எட்டாம் நூற்றாண்டினன். அப் பல்லவ மன்னன். ஆராழி பாய்ந்த இடந்தோறழகிதாப் பாராளும் பல்லவ மன்னன் என்று புகழப்படுகின்றனான். மேலும், மற்றொரு மேற்கோள் வெண்பாவில், ‘செந்தமிழ்’ ஆளி கலி மல்லன்’ என்று புகழ்ப்படுகின்றான். இங்கே குறிக்கப்படும் ‘கலிமல்லன்’ நரசிம்ம பல்லவனனான மாமல்லன் ஆகலாம். எனவே. குணசாகரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பது உறுதி. இவற்றை நோக்கும்போது குணசாகரர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்னலாம். விருத்தியுரை குணசாகரர் விருத்தியுரை, பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றிய இலக்கிய இலக்கண நூல்களின் இயல்பும் சிறப்பும் வரலாறும் அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது. பல்லவர் கால இலக்கியத்தின் காலக் கண்ணாடியாக இவ்வுரை விளங்குகின்றது. இடைக்காலத்தில் தோன்றிய பலவகையான யாப்பிலக்கணக் கொள்கைகளைத் தெள்ளத் தெளிய ஆராய்ந்து கூறி விளக்குகின்றது. அக் கொள்கைகளினிடையே எழும் சிக்கல்களைத் தீர்க்கின்றது. முரண்பாடுகளைத் தீர்த்துச் சிறந்த யாப்பிலக்கணக் கொள்கைகளை உருவாக்குகின்றது. குணசாகரர் சுவைத்த பாடல்களின் திரட்டாக இவ்வுரை விளக்குகின்றது. யாப்பும் பொருளும் யாப்பிலக்கணத்தில் வரும் சொற்களுக்கு மிக நன்றாய்ப் பொருள் கூறி விளக்குகின்றார். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்: கலிப்பா: சீர்பொருள் இசைகளால் எழுச்சியும் பொலிவும் கடுப்பும் உடைத்தாகலின் கலி என்பது காரணக் குறி (55). விருத்தம்: ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்த ஒழுக்கத்தானும் எல்லா அடியும் ஒத்தலானும் புராணம் முதலாகிய விருத்தம் உரைத்தலானும் விருத்தம் என்பதூஉம் காரணக் குறி. இது வடமொழித் திரிசொல். கொச்சகம்: சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை என்றும் கொச்சகம் என்றும் வழங்குவர் (79). |