“நாகபட்டினம் தஞ்சாவூர் உறையூர் எனக்கிடந்த ஊர்ப் பெயர்ச் சொற்கள், கடைகுறைந்து நாகை தஞ்சை உறந்தை என ஐகாரத்தான் முடியும்” (வீர - 56) என்றும், “குரங்குகள் ஆடப்பட்ட துறை யாதொரு ஊரில் உண்டு அவ்வூர் குரங்காடு துறை; மயில்கள் ஆடப்பட்ட துறை யாதொரு ஊரில் உண்டு அவ்வூர் மயிலாடுதுறை” (வீர - 47) என்றும் உதாரணம் காட்டுகின்றார். “கபில பரணர் தங்களிலே வாது செய்தார்கள்” (வீர - 49) என்று ஓர் உதாரணம் காட்டுகின்றார். “மருந்துகளால் ஆடப்பட்ட எண்ணெய், மருந்தெண்ணெய், இருப்பை நெய் (வீர - 44), மருந்தைப் பண்ணுவான் மருத்துவன்” (வீர - 54) என்ற உதாரணங்கள் அக்கால நாகரிகத்தை உணர்த்துகின்றன. “மாச்சோறு உண்கின்ற சிறுக்கன் அதன்கண் வீழ்ந்த தூளியினைத் தின்றான்” (வீர - 41). “தேசங்களிலே தேசங்களிலே பற்றிக்கொடு நிகழ்கின்ற யாதொரு பூசல் தேசாதேசி எனவும், தண்டுகளாலே தண்டுகளாலே அடித்து நிகழ்கின்றதோர் பூசல் தண்டாதண்டி எனவும் வருவன” (வீர - 47) என்ற உதாரணங்களில், அக்கால மக்களின் பேச்சுமொழி இடம் பெற்றுள்ளது. உயிரும் பயிரும் நீர்க் காக்கை, கடற்பன்றி (வீர - 44) என்பனவற்றை இவர் உதாரணம் காட்டுகின்றார். “கல்லுத் தலையின்கண் யாதொரு மீனுக்கு உண்டு அம்மீன் கற்றலை” என வழங்கப்படும் என்கின்றார் (வீர - 47, 49). “கொம்மட்டி போலக் காய்க்கும் மாதளை கொம்மட்டி மாதளை” (வீர - 51) என்று ஓரிடத்தில் எழுதுகின்றார். இவர் காலத்தில் ‘வழுதுணை’ பயிரிடப் பெற்றது (வீர - 96). மகரக்குறுக்கம் - சிறந்தவிளக்கம் பெருந்தேவனார் தம் உரையில், மகரக் குறுக்கம் பற்றிய தொல்காப்பிய நூற்பாவுக்குச் சிறந்த பொருள் கூறுகின்றார். இந்தப் பொருளே பொருத்தமாக உள்ளது. தொல்காப்பியர், மகரம் தன் மாத்திரையில் குறுகி வருகின்ற இடத்தைப் கூறிய பின், ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ என்ற நூற்பாவை அமைத்துள்ளார். இதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் ‘ப்’ |