வெண் கண்ணி என்பதற்கு (வாகை -2) கொத்தான் வாகை என்றும், எழுது எழில் மாடம் என்பதற்கு (உழிஞை - 26) சித்திரம் எழுதிய அழகிய மாளிகை என்றும் பொருள் எழுதியிருப்பது எண்ணி மகிழத்தக்கதாகும். இவருக்கு முன் இருந்தோர் கொண்ட வேறு பாடங்களையும் உரைகளையும் இவர் குறிப்பிடுகின்றார (வாகை - 8). எண்வகை தானியம் (ஒழிபு - 4), மன்னனுக்கு உரிய பல வகைத் தொழில், உறுப்பு (பாடாண் 37, வாகை - 32), மூவுலகம் (வாகை - 13) ஆகியவற்றை விரித்துரைக்கின்றார். ஒரே துறை வேறு வேறு திணைகளில் இடம் பெற்றால் அவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றார். “திணை தோறும் வாணாட்கோள், குடை நாட்கோள் வேறுபாடுடைய” (உழிஞை - 3) என்றும், “தும்பையின் முன்தேர்க் குரவை பின்தேர்க் குரவை, போர்க்குச் செல்லும் தேரின்மேல். இவை (வாகைப் படலத்துள்) வென்று நின்ற தேரின் மேல்” (வாகை - 8) என்றும் கூறியுள்ளார். பல்கலைப் புலமை பல்வேறு கலைகளைப்பற்றிய அறிவு இவ்வுரையாசிரியருக்கு உண்டு. வடமொழிப் பயிற்சி போதிய அளவு உள்ளது. கோழி வென்றியில் (ஒழிபு-9), “சொல்லுக்குச் சொல் வெல்லும், ஆமைக்கு ஆமை வெல்லும், தெங்குக்குத் தெங்கு வெல்லும் எனக் கோழிகளின் திறம் அறிந்து விடுதல். வித்தகர் - கோழி நூல் வல்லவர்” என்று விளக்குகின்றார். பூழ் வென்றியில் (ஒழிபு-6), “சொல்லக் கடவ மந்திரம் பல ஆவன; தீற்றும் அரிசி ஓதும் மந்திரமும், பச்சிலை பிசைந்து தடவும்போது சொல்லும் மந்திரமும் செவியுள்ளுறுத்தும் மந்திரமும்” என்று உரைக்கின்றார். குதிரை வென்றியுள் (ஒழிபு-13) ஐந்து வகை கதியினையும் விளக்குகின்றார். 6. நம்பி அகப்பொருள் விளக்கவுரை தமிழிலக்கிய உலகில் இறையனார் அகப்பொருள் நூலுக்குப்பின், நாற்கவிராச நம்பி இயற்றிய ‘அகப்பொருள் விளக்கம்’ சிறப்புற்று விளங்குகின்றது. தமிழ் அகப்பொருள் |