இந்நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர். இவர் பதினேழாம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்தார். இவர் தந்தையார் வன்மீகநாத தேசிகர். வைத்தியநாத தேசிகர் அகோர முனிவரிடம் கல்வி கற்று வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றார். இவர் கயத்தாற்றில், திருமலை நாயக்கரின் ஆணையாளர்களில் ஒருவரான திருவேங்கடநாத ஐயரின் மக்களுக்குக் கல்வி புகட்டும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தம் மாணவர்களுக்கு இலக்கணங் கூற, தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம் முதலிய இலக்கணங்களையும் உரைகளையும் கற்பிக்கும்போது தமக்குப் பிடித்தமான பல கருத்துகளை ஒன்று சேர்ந்து ‘இலக்கண விளக்கம்’ என்று ஒரு நூல் செய்தார். இந்நூல் ஐந்திலக்கணம் கூறும் நூலாக அமைந்தது. இலக்கண விளக்கத்தில் இவர் முன்னோர் கருத்துகள் சிலவற்றை மாற்றிவிட்டார். “பழையன கழிதலும்” என்ற நன்னூலார் சூத்திரத்தை, பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் வழுவல கால வகையி னான என்று மாற்றியுள்ளார். இவர் தம் நூலுக்குத் தாமே உரை இயற்றினார். இச் செய்தியைச் சாமிநாத தேசிகர் தம் இலக்கணக்கொத்து நூலில், என்கண் காணத் திருவா ரூரில் சிறப்புற் றிலகும் வைத்திய நாதன் இலக்கண விளக்கம் வகுத்துரை எழுதினான் என்று குறிப்பிடுகின்றார். மற்றவை தொன்னூல் விளக்கத்தை இயற்றியவர் வீரமாமுனிவர் (1680-1747). முத்து வீரியத்தை இயற்றியவர் முத்து வீரமுனிவர். தொன்னூல் விளக்கம் முத்து வீரியம் ஆகிய இரு நூல்களே அன்றிச் சாமிநாதம் என்னும் இலக்கண நூலும் உள்ளது. இந் நூலின் சில பகுதிகளே தமி்ழ்ப் பொழிலில் (பகுதி - 4) வெளிவந்துள்ளன. சாமிநாதம், அந்நூலில் உரை ஆகியவை பற்றி ச. வையாபுரி பிள்ளை பின் வருமாறு கூறுகின்றார்: “பொதிகை நிகண்டின் ஆசிரியராகிய சாமிநாத கவிராயரைக் குறித்து ஒரு சில செய்திகளே அறியக்கிடக்கின்றன. திருநெல்வேலி ஜில்லாவைச் சார்ந்த அம்பா சமுத்திரம் தாலுக்காவில் கல்லிடை நகரில் இவர் வாழ்ந்தவர். இந் நிகண்டு |