சுப்பராயச் செட்டியார் (?-1894) இவர் உரை இயற்றிய நூல்கள்: பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், காஞ்சி புராணம், புலியூர் வெண்பா. பிரமபுரி திருவேங்கடம் பிள்ளை இவர் நந்த மண்டல சதகத்திற்கு உரை இயற்றினார் (1894). அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (?-1836) இவர் கந்தர் அனுபூதி, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் இரண்டிற்கும் உரை எழுதினார். காஞ்சிபுரம் சபாபதி முதலியார் (?-1870) இவர் பெரிய புராணத்திற்கும் திருவிளையாடல் புராணத்திற்கும் உரை கண்டார். தாண்டவராய முதலியார் இவர் உரை எழுதி வெளியிட்ட (1870) சூடாமணி நிகண்டு பல பதிப்புக்கள் வெளிவந்தன. மகுதண்ண மரைக்காயர் விவேக சிந்தாமணிக்கு உரை இயற்றினார் (1896) காதிரசனா மரைக்காயர் சீறாப் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார் (1887). இராமனுசக் கவிராயர் (1835-) இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த இவர், புலமைச் செல்வம் பெற்றபின், சென்னை வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்தார். நன்னூல் காண்டிகை உரை, ஆத்திசூடி உரை, கொன்றை வேந்தன் உரை ஆகியவற்றை எழுதியுள்ளார். தொழுவூர் வேலாயுத முதலியார் (1832-1889) வள்ளலாரின் மாணவர். சேலம் செவ்வாய்ப்பேட்டையருகே உள்ள தொழுவூரில் பிறந்தவர். பெரிய புராண வசனம் இயற்றினார். மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் (1883-1888) திருநெல்வேலி மாவட்டத்தில் - மேலகரம் என்னும் ஊரில் - திரிகூடராசப்பக் கவிராயர் மரபில் தோன்றியவர். |