எழுத்தினுள் உயிர்மெய்யை, உம்மைத் தொகை என்றும் அன்மொழித் தொகை என்றும் வேற்றுமைத் தொகை என்றும் உரைப்பர். சொல்லினுள் மக்கட் சுட்டை அன்மொழித் தொகை என்றும் இரு பெயரொட்டு ஆகுபெயர் என்றும் பின்மொழி ஆகுபெயர்ப் பண்புத்தொகை என்றும் உரைப்பர். பொருளினுள் (188) வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது என்புழி மூன்றினை, பதிபசு பாசம் என்றும் தத்துவ மசி வாக்கியம் என்றும் அறம் பொருள் இன்பம் என்றும் எழுத்துச் சொற்பொருள் என்றும் ஆண்டு என்றும் உரைப்பர். இவை ஒரு சூத்திரத்திற்கே பலரும் பல மதமாய் உரைத்தல். ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் இலக்கண ஆய்வில் பல மாறுபட்ட சிந்தனைகளை எழுப்பியுள்ளன. அவற்றைத் தொகுத்துக் காண்போம். “அணங்கு கொல்” என்னும் குறளில் வந்துள்ள கனங்குழை என்பதைப் பரிமேலழகர் ஆகுபெயர் என்றார். சிவஞான முனிவர் இதனை அன்மொழித் தொகை என்று கூறுகின்றார். இவர், பரிமேலழகர் கருத்தை மறுத்து, இலக்கண விளக்கச் சூறாவளி மறுப்புரையில் விளக்கம் தருகின்றார். திருக்கோவையாரில் (282), வருகின்ற ‘பாயின மேகலை’ என்ற சொற்கள் ஒரு சொல் நீர்மைப்படுதலின் ஆகுபெயர் என்று கூறினார் பேராசிரியர். பேராசிரியர் கருத்தைப் பிரயோக விவேகநூல் (சமாச படலம் - 7) ஆசிரியர், மறுக்கின்றார். பெயரெச்சம் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் ஆகப் புணர்ந்தது நோக்காமையின் அவ்வாறு உரைத்தார் என்று மறுத்து, அதனை அன்மொழிக் தொகை என்று கூறுகின்றார். |