உரைகளைக் காணும் வாய்ப்பு ஏற்படவே, பலரிடம் இருந்த நல்ல கருத்தைத் தொகுத்துக் காணும் ஆற்றலைப் பெற்றனர். எல்லா உரைகளிலிருந்தும் நல்லனவற்றை மேற்கொண்டு மாறுபட்டவற்றையும் தேவையில்லாதவற்றையும் விலக்கித் தாமும் பல நல்ல கருத்தை எழுதும் வாய்ப்பு, பின் வந்தவர்க்கே கிடைத்தது. இதனால் அவர்கள் எழுதிய விளக்கவுரைகள் செல்வாக்கு எய்தின; காலங்கடந்து நின்றன; நிலைத்த வாழ்வு பெற்றன. இக் காரணங்காளல் இளம்பூரணருக்குப்பின் தோன்றிய தொல்காப்பிய உரைகள் வாழ்வு பெற்றன; திருவாய்மொழிக்கு 6000 படி, 9000 படி, 24000 படி ஆகிய வியாக்கியானங்களுக்குப் பின் தோன்றிய 36000 படி ஈடு என்ற சிறப்புப் பெற்றது. ஒன்பது உரைகளுக்குப்பின் தோன்றிய பரிமேலழகர் உரை நிலைபெற்றது. மயிலை நாதருக்கும், சங்கர நமசிவாயருக்கும் பின் தோன்றிய சிவஞான முனிவரின் நன்னூல் உரை செல்வாக்குப் பெற்றது. பல உரைகள் சிவஞான போதத்திற்குத் தோன்றியபின் எழுந்த சிவஞான பாடியம் சிறப்பும் பெற்றது. உரைக்கு உரை உரையாசிரியர்கள் எழுதிய உரைவிளக்கங்கள் காலப் போக்கில் விளங்காத நிலையை அடைந்தன. அதனால் உரைக்கு உரை எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் விளைவாய் உரைக்கு உரை பல தோன்றின. நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களுக்குப் பல அரும்பதவுரைகள் தோன்றியுள்ளன. பரிமேலழகர் உரையை விளக்கப் பிற்காலத்தில் பல உரைவிளக்கங்கள் தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமேனி இரத்தின கவிராயர், பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக ‘நுண்பொருள் மாலை’ என்ற பெயருடன் ஒரு நூலை இயற்றினார். 1869-ஆம் ஆண்டில் பரிமேலழகர் உரையை, பல விளக்கங்கள் எழுதிச் சரவணப் பெருமாள் ஐயர் பதிப்பித்தார். 1885-இல் முருகேச முதலியார் பரிமேலழகர் உரைக்கு விளக்கம் எழுதி வெளியிட்டார். பின்னர், இராமாநுசக் கவிராயர், வை. மு. சடகோப ராமாநுசாச்சாரியார், கோ. வடிவேல் செட்டியார் (1919), அரசஞ் சண்முகனார், வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் பரிமேலழகர் உரைக்கு விரிவுரை எழுதியுள்ளனர். தொல்காப்பிய உரைகளுக்கும் இத்தகைய உரை விளக்கங்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பகுதிகளையும் பழைய உரைகளுடன் வெளியிட்ட ஈழத்து அறிஞர் கணேச ஐயர், பலவகை |