ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வகையான இலக்கியங்களுக்குச் செல்வாக்கு இருந்தது என்பது விளங்கும். காலச்சூழலே அன்றி அரசியல் சார்பும், நூலாசிரியர் சமயம் முதலிய அகச்சார்பும் மேற்கோள் நூல்களின்மீது ஆதிக்கம் செலுத்தின. பழந்தமிழ் இலக்கியச் செல்வாங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றை எல்லா உரையாசிரியர்களும் மேற்கோள் காட்டுகின்றனர். எட்டுத்தொகையுள் குறுந்தொகைப் பாடல்களே மிகப்பல உரையாசிரியர்களால் மிகுதியான இடங்களில் மேற்கோள்களாகக் காட்டப் பெற்றுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் எல்லா நூல்களும் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளன. அவற்றுள் திருக்குறட் பாக்களே எண்ணற்ற உரையாசிரியர்களால் காலந்தோறும் மேற்கோள் காட்டப்பெற்றுள்ளன. திருக்குறளுக்கு அடுத்த படியாக நாலடியார் செய்யுள்கள் மிகுதியாக மேற்கோளாக ஆளப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு 500 இடங்களில் மேற்கோளாக வந்துள்ளது. அவற்றுள் திருமுருகாற்றுப்படை முதலிடம் பெறுகின்றது. அடுத்து மலைபடுகடாம் பெரும்பாணாற்றுப் படை நெடுநல்வாடை இடம் பெறுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் குறுந்தொகையில் உள்ள 250 பாடல்கள் 1000 இடங்களில் காட்டப்படுகின்றன. கலியும் புறமும் அடுத்த இடத்தைப் பெறுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறளும் நாலடியாரும் சிறப்பிடம் பெறுகின்றன. 721 குறள்கள் 2500 இடங்களிலும் நாலடியார் செய்யுட்கள் 300 இடங்களிலும் வந்துள்ளன.* இவ்வாறு மேற்கோள்களாகக் காட்டப்பெற்ற செய்யுள்கள் புதிய விளக்கங்களைப் பெற்றுள்ளன: நல்ல பாட வேறுபாடுகளைப் பெற்றுச் சிறப்படைந்துள்ளன; சிறந்த பாடத்துடன் தெளிவாய் உள்ளன. அப்பாடல்களுக்கு உரையாசிரியர்கள் தந்த விளக்கம், அவற்றிற்கு உரை கண்ட பிற்கால உரையாசிரியர்களுக்குப் பெரிதும் உதவி செய்தன. பெருங்காப்பியங்களில், சீவக சிந்தாமணிப் பாடல்கள் பல, உரையாசிரியர்கள் பலரால் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மிகச் சில இடங்களில மேற்கோளாக உதவுகின்றன. சூளாமணிப் பாடல்கள் இலக்கியச் சுவைக்கும், சொல்லழகிற்கும் உதாரணமாகக் காட்டப் பெறுகின்றன. * திருக்குறள் மேற்கோள் விளக்கம் - டாக்டர் அ. தாமோதரன், (1970) பக். 45, 46. |