வீரர் களிறேற வெல்வேந்தர் தேரேறப் போர்கெழு வெஞ்சிலைநாண் பூட்டேற - வார்முரசம் ஆர்ப்பேற வேல்இளைஞர் மாஏற வெஞ்சுடர்வாள் கூர்ப்பேற ஏறினான் குன்று. (வீரசோழியம் - 152) காஞ்சி மாநகரத்தின் சிறப்பை விளக்கும் பாடல் ஒன்று யாப்பருங்கல விருத்தியுரையுள் (62) இடம் பெற்றுள்ளது. வையகம் எல்லாம் கழனியா வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின் சாறேஅந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறம்எல்லாம் கச்சியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ன்ஏற்றான் கச்சி யகம் (யாப்ப. விருத்தி 62) என்பதே அப்பாடல். நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரை ஆதரித்த சீயகங்கனின் கொடைச் சிறப்பை, மயிலைநாதர் மேற்கோள் காட்டும் வெண்பா ஒன்று மிக அழகாகப் பாடுகின்றது. கங்கன் அகன்மார்பன் கற்றோர்க்கு இனிதளிக்கும் செங்கனக வெள்ளைச் செழுமணிகன் - எங்கும் தெறித்தனவே போல்விளங்கும் மீன்சூழ்ந்த திங்கள் எறிக்கும்நிலா அன்றோ இனி (நன் - 267) என்ற பாடல் காலத்தை வென்று விளங்கும் கலைச் செல்வமாய்ப் பொலிந்து கங்கன் புகழைச் தமிழ் மக்களிடம் பரப்பிக் கொண்டே இருக்கும். இன்னும் சிறந்த பாடல்கள் பல, உரைதோறும் உள்ளன. அவற்றைத் தேடி எடுத்துத் தொகுத்துச் சுவை பயக்கும் விளக்கங்கள் தருவது சிறந்த இலக்கியப் பணியாகக் கருதிப் போற்றப்படும். 4. சமயங்கள் வளர்ந்த உரைகள் ஆங்கிலம் வணிக மொழி; இலத்தீன் சட்ட மொழி; கிரேக்கம் இசை மொழி; ஜெர்மன் தத்துவ மொழி; பிரெஞ்சு தூது |