பக்கம் எண் :

707நோக்கு

அச்சேறிய நூல்களின் மறுபதிப்பைச் செப்பனிட்டத் தெளிவுபடுத்தி, ஒழுங்கு
படுத்திய பெருமை ஈழநாட்டுப் புலவர் சி.கணேசையர், ந.மு. வேங்கடசாமி
நாட்டார், ச.தண்டபாணி தேசிகர், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை
ஆகியோர்க்கு உரியதாகும். இத் தமிழ்த் தொண்டர்கள், தாம் பதிப்பித்த
நூல்களின் பதிப்புரையில், தமக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கூறுகின்றனர்.

     கலித்தொகையின் பதிப்புரையில், சி.வை. தாமோதரம்பிள்ளை தம்
காலத்தில் ஏடுகள் பல அழிந்து வருவதைக் கண்டு துன்புற்றுப் பின் வருமாறு
எழுதுகின்றார்:

     “பழைய சுவடிகள் யாவும் கிலமாய் ஒன்றோடு ஒன்றாய் அழிந்து
போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் 
இலர். இந்நாள் தவறினால், பின்பு தவம் புரிந்தாலும் ஒருதரம் அழிந்த
தமிழ்நூற்களை மீட்டல் அரிது. காலத்தின் வாய்ப்பட்ட ஏடுகளைப் பின்
தேடி எடுப்பினும் கம்பையும் நாராசமும் தான் மீரும்”,

     இவ்வாறு கூறித் தமிழ்மக்களை, தமிழ் ஏடுகளைக் காக்குமாறு பணித்த
அவர், தமிழகத்தின் பல இடங்களிலிருந்து பல ஏடுகளை அரிதில் முயன்று
பெற்று அச்சிடும் எண்ணத்துடன் பேணி வைத்தார். தமக்குக் கிடைத்த
ஏடுகளின் நிலையைப் பற்றி அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

     “ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும்போது இதழ்
முறிகிறது. ஏட்டைப் புரட்டும்போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி,
எழுத்துக்களோ என்றால், வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக்
கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது”.*

     ஏடுகளின் நிலை எது என்றால், எழுத்துகள் எளிதில் படித்து அறிய
முடியாதவையாய் இருந்தன. ஏடு எழுதியர்களால் நேர்ந்த பிழைகள்
கணக்கின்றி இருந்தன. இவற்றை டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் கீழுள்ளவாறு
எழுதி நமக்கு அறிவிக்கின்றார்.

     “ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில்
உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியிலுள்ளவாறு ஏட்டுச் சுவடி
அமைந்திராது. சுவடியில்ல எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள்
கொம்பு கால் புள்ளி முதலியவை இரா; நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு
தெரியாது; அடிகளின் வரையறைகளும் இரா; இதுமூலம் இஃது உரை, இது


 * கலித்தொகை - பதிப்புரை