என்று பரிபாடலிலும், குறிஞ்சிப் பாட்டிலும் (62, 90) காந்தளும் தோன்றியும் வேறு வேறாகவே குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய பிழைகளைக் களைந்து திருத்தமான உரை காணுதல் வேண்டும். உரைச்சிதைவு* ஒரு சூத்திரத்திற்கு அமைந்த உரையைப் பதிப்பித்தோர் சிதையச் செய்திருப்பதைக் காண்போம். அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய என்ப என்பது இகர ஈற்று அளபெடைப்பெயர் விளியேற்கு மாற்றைக் கூறுகின்றது. இளம்பூரணர் உரை இச்சூத்திரம் இகரம் ஈறாயின், இயல்பாயே விளியேற்கும் என்றவாறு. வரலாறு: தொழீஇ என வரும். பெயர் நிலையும் விளி நிலையும் அதுவே நிற்குமாறு. ‘இனிச் ‘செயற்கைய’ என்றதனால், இரண்டு மூன்று மாத்திரை பெற எழுதுவாரும், ஐந்து மாத்திரை பெற எழுதுவாரும் என இரு திறத்தார் ஆசிரியர் என உணர்க’ சேனாவரையர் உரை அளபெடை தன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப்பெயர். இ ஈயாகாது இயல்பாய் விளியேற்கும் செயற்கையை உடையவாம் என்றவாறு, ‘அளபெடை மிக்கு இயற்கையவாகும் செயற்கைய’ என்னாது, ‘மிகூஉம் இகர விறுபெயர்’ என அனுவதித்தாரேனும், மாத்திரை மிக்கு இயல்பாம் என்பது அதனாற் பெறப்படும். உதாரணம்: தோழீஇஇ எனவும், தோழீஇஇஇ எனவும் வரும். இ ஈயாகாமையின், ‘இயற்கையவாகும்’ என்றும், மாத்திரை மிகுதலாகிய செயற்கையுடைமையால், ‘செயற்கைய’ என்றும் கூறினார். ‘இகரவிறுபெயர்’ என்றது, ‘இகரத்தான் இற்ற பெயர்’ என விரியும். * தமிழ் அன்றும் இன்றும்; பக் : 38-40. மகா வித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை |