தெய்வச் சிலையார் உரை ‘இகரவீற்றுக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.’ ‘அளபெடை மிக்க இகரவீற்றுப் பெயர் இயற்கையவாகிய செய்தியையுடைய’ என்றவாறு. ‘உ.ம். தோழீஇ என்பது, விளிக்கண்ணும் அவ்வாறே வரும். ‘செயற்கை’ என்றதனான், விளிக்கண் வரும் ஓசை வேறுபாடு அறிந்துகொள்க. நச்சினார்க்கினியர் உரை ‘அளபெடை தன் இயல்பு மாத்திரையின் மிக்கு நான்கு மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப் பெயர். இ ஈயாகாது இயல்பாய் விளியேற்கும் செயற்கையை உடைய என்று கூறுவர் ஆசிரியர்’, என்றவாறு. ‘உ.ம். தொழீஇஇ ! என வரும். தொழீஇஇஇ என ஐந்தெழுத்தும் இட்டு எழுதுப. ‘இகர ஈற்றுப் பெயர்’ எனவே, நெட்டெழுத்து அளபெடுத்து அன்று; குற்றெழுத்தே நின்று மாத்திரை பெற்றது என்று உணர்க. இது ‘தொழில் செய்கின்றவளே!’ என்னும் பொருள் தந்து நிற்பதோர் சொல். இங்குக் காட்டிய ‘தொழீஇ’ என்னும் சொல்லின் உண்மை வடிவை அறியாத ஏடெழுதுபவர்கள் ‘தோழீஇஇஇஇ’ எனவும், ‘தொழீலீஇஇஇஇஇ’ எனவும் பிழைபட எழுதினார்கள். ‘நான்கெழுத்தும் ஐந்தெழுத்தும் இட்டு எழுதுப’, என்னும் உரை விளக்கத்தை உணராத ஏடெழுதுவோர், நான்கெழுத்தும் ஐந்தெழுத்தும்’ என்றதை அளபெழுந்ததற்கு அறிகுறியாக எழுதிய எழுத்தெனப் பிறழ உணர்ந்து, நான்கும் ஐந்தும் இகரம் இட்டுப் படியெடுத்ததாலும், ‘தொழீஇ’ என்னும் சொல் வடிவமும் பொருளும் அறியாமையால், ‘தோழீஇ’ என்றும், ‘தொழிலீஇ’ என்றும் எழுதிப் படித்தாலும் நேரிட்ட பிழையென்பதை உணராமையால், வழுவிய இப்பாடம் அச்சில் இடம் பெறலாறிற்று என்பது புலனாகும். 7. காலம் தந்த விளக்கம் பெரிய நகரம் ஒன்றில் திருவிழா நடக்கின்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள், பலப்பல ஊர்களிலிருந்து திருவிழாக் காணத் |