ஓடல் செல்லாப் பீடுநடை யாளர் நெடுநகர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும் தண்ணடை பெறுதல் - புறம்: 287 தண்ணடை பெறுதல் உரித்தே வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே -புறம்: 297 என்று வரும் புறநானூற்றுப் பாடற்பகுதிகள், மன்னர்கள் வீரர்களுக்குத் தண்ணடை நல்கும் வழக்கம் இருந்ததை உணர்த்தும். மேலும், புறப்பொருள் வெண்பாமாலையுள், சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே தலையளித்தான் தண்ணடையும் தந்து (2:12) புண்ணோடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும் (3:2) என்று வரும் இடங்கள், வீரர்கள் தண்ணடை பெற்றதை அறிவிக்கின்றன. 4. மறக்குடி மகள், போர்க்களம் சென்று பகைவரை வீழ்த்தும் சிறந்து ஆண்மகனைப் பெறுதலையே சிறந்ததாகத் கருதுகின்றாள். அவளுடைய உள்ளத்தில் உயர்ந்த நினைப்பே எழுகின்றது. தான் பெற்ற மகனைத் தந்தை, சிறந்த வீரனாக்க வேண்டும். போர்க்கலையைத் தன் மகனுக்கு நன்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். தன் மகன் மிகச்சிறந்த போர் வீரானகிவிடவேண்டும் என்று வேட்கை கொள்கின்றாள். கொல்லன் சிறந்த வேல் படையைச் செய்து தர வேண்டுமாம்! வேலை ஏந்தி, போர்க்கலை பயின்ற வீரமைந்தன் களம் நோக்கிச் செல்லவேண்டுமாம்! அங்கே அவன் யானையை வீழ்த்த வேண்டுமாம்! ‘யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று வீரத்திற்கு இலக்கணம் கண்ட தமிழ்மக்கள் போர்க்களிற்றை வீழ்த்தி வாகை சூடுவதை விரும்புவதில் வியப்பு என்ன! இங்கேயும் மறக்குடி மகளின் கனவு உயர்ந்தே உள்ளது. களிறு எறிந்த காளைக்கு மன்னன் சிறப்பு வாய்ந்த பரிசு அளிக்க வேண்டுமாம். தண்ணடை பெறுதல் அக் காலத்தில் சிறந்ததாகக் கருதப்பட்டது. ‘பெரு நீர் மேவல்’ என்னும் புறநானூற்றுப் பாட்டை (புறம்-297) எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர், “சீறூர் புரவாகக் கொள்ளேன், தண்ணடை, கொள்வேன் எனத் தன்னுறு தொழில் |