பொருந்தாதவாறு போல, பெரியோர் ஒடுங்கி இருக்கிச் சிறியோர் விளங்குதல் பொருந்தாது” என்று கூறுகின்றார். இதே கருத்தைத் திருத்தக்க தேவர் தம் நூலில், இம்மிஅன நுண்பொருள்கள் ஈட்டிநிதி ஆக்கிக் கம்மியரும் ஊர்வர்களிறு ஓடைநுதல் சூட்டி அம்மிமிதந்து ஆழ்ந்துசுரை வீழ்ந்ததுஅறம் சால்கென்று உம்மைவினை நொந்துபுலந்து ஊடல்உணர் வன்று - சீவகசிந். 495 என்று கூறகின்றார். இப் பாடலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “ஆழ்தற்கு உரிய அம்மி மிதந்து, மிதத்தற்கு உரிய சுரை வீழ்ந்தது என்றது, உயர்ந்தோர் வாழாதே தாழ்ந்தோர் வாழ்ந்ததனை” என்று பழமொழியின் பொருளை விளக்கியுள்ளார். இப் பழமொழி, பிற்காலத்தில் தோன்றிய அகப்பாடலில் இடம்பெற்றுச் சிறந்த பொருளை விளக்குகின்றது. தலைவியுடன் இல்லறம் நடத்திவரும் தலைவன், பரத்தையை நாடிப்பிரிந்தான். தலைவி அதனால் துன்புற்றாள். பரத்தை இன்பமாக வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருநாள் அல்ல, பல நாள் இந்நிலை இருந்தது. தலைவனுக்கு உரியவள் தலைவி, அவளே இன்பத்தோடு வாழ வேண்டும். ஆனால், அதற்குமாறாகப் பொதுமகள் ஒருத்தி வாழ்ந்து மகிழ்கின்றாள். சுரை ஆழ அம்மி மிதப்பது போன்றது அல்லவா இந்நிலை? இதனைத் தலைவி, தன் தோழியிடம் கூறுகின்றாள். “கானக நாடனாகிய தலைவனின் சுனையில் சுரைஆழும் அம்மி மிதக்கும் யானை மூழ்கும் முயல் நிற்கும்” என்று இவ்வூரார் கூறுகின்றனர். ஆதலின், இன்புற்று வாழவேண்டிய நாம் துன்புறுவதிலும், பொதுமகள் ஒருத்தி மகிழ்ந்து வாழ்வதிலும் வியப்பு இல்லை. சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப கானக நாடன் சுனை என்ற பழம் பாடல் இக் கருத்தினை உடையதாகும். இப்பாடலுக்கு, உரையாசிரியர்கள் பலரும் இவ்வாறு பொருள் கொள்ளவில்லை. தொல்காப்பியர் கூறும் சுண்ணப் பொருள்கோளுக்கு (சொல்-406) இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் இப்பாடலை உதாரணமாகக் காட்டி, “சுரை மிதப்ப அம்மி ஆழ யானைக்கு நிலை முயற்கு நீத்து எனத் துணித்துக் |