பயப்பே பயனாம் பசப்புநிற னாகும் என்றும், இயைபே புணர்ச்சி இசைப்பு இசையாகும் என்றும் இணைப்பது பொருத்தமாக உள்ளது. எதுகை நோக்கிச் சிலவற்றை இரண்டு அடிச் சூத்திரங்களாக அமைக்கலாம். வம்புநிலை இன்மை (உரியியல் -30) மாதர் காதல் (உரியியல் -31) நம்பும் மேவும் நசையா கும்மே (உரியியல் -32) இவற்றைச் சேர்த்து, வம்புநிலை இன்மை மாதர் காதல் நம்பும் மேவும் நசையா கும்மே என்று இரண்டு அடியாக எதுகை மோனை அமைந்த ஒரு சூத்திரமாக அமைக்கலாம். வயவலி யாகும் (உரியியல் -68) வாள்ஒளி யாகும் (உரியியல் -69) துயவென் கிளவி அறிவின் திரிபே (உரியியல் -70) என்பவற்றை, வயவலி யாகும் வாள்ஒலி யாகும் துயவென் கிளவி அறிவின் திரிபே என்றும், உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம் (உரியியல்-71-73) என்பனவற்றை, உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம் என்றும் இணைக்கலாம். சிவப்பிரகாசம் என்னும் நூலின் அவையடக்கத்தில், தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று தோன்றியவாம் எனும்எவையும் தீதாகா என்று உமாபதி சிவாசாரியர் கூறியுள்ள கருத்து, பொன்னே போல் போற்றி மேற்கொள்ளத்தக்கதாகும். |