முளை - குழந்தை என்று பொருள் கொண்டு, குறிப்பு உருவகமாய்க் கருதி நோக்கினால் இலக்கியச்சுவை மிகுகின்றது. ஆனால், இலக்கண உரையாசிரியர்கள் பலரும், இந்த அடியை வேற்றுமை உருபு மயக்கத்திற்கு மேற்கோள் காட்டி, “கிழங்கு மணலுள் ஈன்ற முளை என ஏழாவதன் உருபாகக் கொள்ள வேண்டும்” என்று விளக்குகின்றனர். 5 குறுந்தொகையில் 113-ஆம் பாடலில், கூழைக்கு எருமண் கொணர்தற் சேறும் என்ற அடியில் உள்ள ‘எருமண்’ என்ற பாடம் பொருத்தமற்றது என்றும், அது ‘எருமணம்’ என்று இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி அறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை கூறுகின்றார் (இலக்கிய தீபம் (1955), பக் 118-121). அவர் கூறியுள்ள விளக்கம்: “நான் கொண்ட பாடம் எருமணம் என்பது. இதற்குச் செங்கழுநீர் என்ற பொருள் உண்டு என்பது, பிங்கலந்தையால் அறியலாம். அரத்த முற்பலம் செங்குவளை எருமணம் நல்லாரமும் செங்கழு நீரும் அதன்பெயர். இது மரப்பெயர்த் தொகுதியில் கண்ட சூத்திரம். அச்சுப் பதிப்பில், இச்சூத்திரம் வேறுபட்டுக் காணப்படினும், எருமணம் என்ற பெயர், அதன் கண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கூந்தலில் பெய்து முடித்தற்குச் செங்கழுநீர் மலர் கொண்டு வர, தோழியருடன் தலைவி பொழிலுக்குச் செல்வதாகக் கூறிக் குறியிடம் உணர்த்தியமை தெளிவாம். இதுவே பொருத்தமாய் உள்ள பொருள். இப்பாடலின் பொருள், ‘நந்தீ வரமென்னும்’ என்ற திருக்கோவையாரில் உள்ளது.” 6 தொல்காப்பியம் உரியியலில் உள்ள, ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும் என்ற நூற்பா, ஆராய்ச்சி உலகில் சிந்தனையை எழுப்பியுள்ளது. ‘எற்றம்’ என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். ஏனைய உரையாசிரியர்கள் அனைவரும் ‘ஏற்றம்’ என்று பாடம் கொண்டு, |