மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றார். (சேர நாடும் செந்தமிழும். செ. சதாசிவம் (1949), (பக்கம் 82). ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்‘ என்ற நூலின் ஆசிரியர், திருக்குறளுக்குப் பழங்காலத்தில் தோன்றிய பத்து உரைகளும் தீயில் அகப்பட்டு அழிந்ததை, பின் வருமாறு கூறுகின்றார்: “அதிவீரராம பாண்டியனின் புத்தகசாலையில் இருந்த ஏட்டுச் சுவடிகள், பிற்காலத்தில் கோயில் அதிகாரிகளால் தீயில் இட்டுக் கொளுத்தப்பட்டனவாம்! மதுரைத் தமிழ்ச் சங்கப் புத்தக சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏட்டுச் சுவடிகள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்துபோயின. அதில் அச்சில் வராத சில பல ஏட்டுச் சுவடிகளும் இருந்தனவாம். திருக்குறள் பத்து உரைகளும் அதில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம்!” (பக்கம்-328). மக்களின் அறியாமையால் தீக்கு இரையான ஏடுகளைக் குறித்து டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் “பழங்காலத்தில் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தால் புதிய பிரதிபண்ணிக் கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது (நெருப்பில் இடுவது) வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம்பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டு, சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுடிவகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!” என்று மனம் நொந்து எழுதுகின்றார் (என் சரிதம்-பக்கம் 928). பிற்காலத்தில் எழுந்த சமயப் பகைமை பல தமிழ் நூல்களை அழித்தன. சைவ சமயத்தவர் சைன, பௌத்த நூல்களைப் போற்றாமல் வெறுத்து ஒதுக்கினர்; புறச்சமய நூல்களைப் பயிலக்கூடாது என்று தடுத்தனர். சைவ சமயத்தவரான இலக்கணக் கொத்தின் ஆசிரியர், “நன்னூல் சின்னூல் அகப்பொருள் காரிகை அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலான இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர்” என்று உரைக்கின்றார். சிவஞான முனிவர் சோமேசர் முதுமொழி வெண்பாவில் (20), சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதுஎனவே தூக்கிஉப தேசித்தார் சோமேசா-நோக்கின் |