பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல் என்று கூறுகின்றார். அப்பாடலின் உரை, “சிந்தாமணி என்றது உபலக்கணம் ஆதலின், அதுபோலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணிப் பயிற்சியும் சைவ வைணவ நன் மக்களுக்கு ஆகா” என்று கூறுகின்றது. இவ்வாறு புறக்கணித்துவிட்டதால், சைன பௌத்த சமய இலக்கியங்களும் அவற்றின் உரைகளும் போற்றுவாரின்றி மறைந்தன. மறைந்துபோன உரை நூல்களை அறிவதற்கு உரையாசிரியர்கள் பெரிதும் துணைபுரிகின்றார். உரைச் சிறப்புப் பாயிரங்கள், ஏனைய உரைகளைச் சுட்டும் உரைப் பகுதிகள் ஆகியவற்றின் துணைகொண்டு மறைந்துபோன உரை நூல்களை இனிக் காண்போம். இறையனார் களவியல் உரைகள் நக்கீரர் இயற்றியதாக வழங்கிவரும் இறையனார் களவியல் உரை, அந்நூலுக்கு உரை தோன்றிய வரலாற்றைப் பின் வருமாறு கூறுகின்றது: “(பாண்டியமன்னன்) சங்கத்தாரைக் கூவுவித்து, ‘நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்த பொருளதிகாரம், இதனைக்கொண்டு போய்ப் பொருள் காண்மின்’ என, அவர்கள் அதனைக் கொண்டு போந்து’ கல்மாப் பலகை ஏறியிருந்து ஆராய்வுழி எல்லோரும் தாம்தாம் உரைத்த உரையே நல்லது என்று சில நாளெல்லாம் சென்றன.” இப்பகுதி, இறையனார் களவியலுக்குப் பல உரைகள் தோன்றின என்று கூறுகின்றது. இவ்வுரைகளை இயற்றியவர் பெயர் முதலியவற்றைக் குறிப்பிடவில்லை. ஆனால் இவ்வுரையில் மற்றோரிடத்தில், நக்கீரரைத் தவிர வேறு ஓர் உரையாசிரியர் பெயர் குறிப்பிடப்படுகின்றது. “எல்லோரும் முறையே பொருள் உரைப்பக் கேட்டு (உருத்தரசன்மன்) வாளா இருந்து மதுரை மருதன் இளநாகனார் உரைத்தவிடத்து ஒரோ விடத்துக் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் நிறுத்தி பின்னர்க் கணக்காயர் மகனார் உரைத்தவிடத்துப் பதந்தோறும் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்.” இங்கே குறிப்பிடப்படும் மதுரை மருதன் இளநாகனார் உரை மறைந்துவிட்டது. சிறந்த உரையைத் தேர்ந்தெடுத்த பின், |