சரித்திரக் கீர்த்தனை"க்கு மூலமாகும். ஆனால், மூலக்கதையிலே, நந்தன்,
பண்ணை எசமானுக்கு அடிமைப்பட்ட உழவன் அல்லன். வேதிய மிராசுதார்
பாத்திரம் திருநாளைப் போதுவார் கதையிலே இல்லை. அந்தப் பாத்திரம்,
அந்நாளில் நிலப்பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு இழைத்து வந்த
கொடுமைகளை விளக்குவதற்கென்றே கோபாலகிருஷ்ண பாரதியார்
படைத்ததாகும். கோபாலகிருஷ்ண பாரதியார், பிறப்பால் அந்தணர்; கதாகாலட்சேபம்
நடத்துவதிலே காலங் கழித்தவர்; ஒழுக்கநெறி வழிப்பட்ட வைதிகர், ஆயினும்,
தீண்டாமைக் கொடுமையை அவர் மனமார வெறுத்தார். பண்ணை
மிராசுதாரர்கள் தங்களிடம் பாடுபடும் தாழ்த்தப்பட்ட சாதியினர்க் கிழைத்த
கொடுமைகளைக் கண்டு மனங்குமுறினார். அதன் விளைவாகவே, 'நந்தனார்
சரித்திரக் கீர்த்தனை" யைப் படைத்தார். அதற்காக, வைதிகர்கள் அவரை
வசைபாடினர்.நிலப்பிரபுக்கள் அவர்மீது சீற்றங்கொண்டனர்.தங்களைச் சார்ந்து
வாழ்ந்த புலவர்களை ஏவிவிட்டு,"சேக்கிழார் பெருமான் புனைந்த திருநாளைப்
போதுவார் கதைக்கு முரணாக அமைந்துள்ள காரணத்தால் நந்தன் சரித்திர
நாடகத்தை மக்கள் படிக்கக்கூடாது, மதிக்கவும் கூடாது" என்றெல்லாம்
பிரச்சாரம் செய்தனர். சோழ மண்டலத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு
முழுவதிலுமே அந்நாளில் ஒருபெரும் புயலைக் கிளப்பிவிட்ட 'நந்தனார்
சரித்திரக் கீர்த்தனை' நாடகம்.
டாக்டர் சாமிநாதய்யர்
சங்க இலக்கியங்களுக்கு - தமிழினத்தின் வீரத்தையும் காதலையும்
விளக்கிக் கூறும் ஏடுகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குத் தேட ஒரு
புனிதர் தோன்றினார். அவர், "தமிழ்த் தாத்தா" என்று போற்றப்படும் டாக்டர்
உ.வே.சாமிநாத ஐயர் ஆவார். இவர், சர்வ சமய இலக்கியங்களிடையே
ஒருமைப்பாடு கண்டவர் எனலாம்.
ஐயரவர்கள், பிறப்பால் அந்தணர்; பின்பற்றிய சமயத்தால்
சைவர்; வாழ்க்கை நெறியால் பரம வைதிகர். ஆயினும், சமயக்
காழ்ப்புக்கு இடங் கொடாத சமரசவாதி. இராமலிங்க வள்ளலாரும்,
மாயூரம் வேதநாயகனாரும் அரும்பாடுபட்டு வளர்த்து வைத்து சமய
சமரச நெறியிலே ஐயரவர்களும் நம்பிக்கை கொண்டவரானார்.
அதனால், சைவர்களால் - புறச்சமய இலக்கியங்கள் என்ற நினைப்
பால் - புறக்கணிக்கப்பட்ட "சீவக சிந்தாமணி" என்னும் பெருங்காப்பிய