நூலை அச்சிட்டருளினார். அதனைப் பதிப்பிக்க அவர் எடுத்துக் கொண்ட பெருமுயற்சி, அப்பெரியார் தமிழிடத்துக் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுக்குச் சான்றாகும். சைவ சமய குரவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட சமண சமயத்தின் காப்பியமொன்றைத் தூய சைவரான ஐயரவர்கள் பதிப்பித்தார் என்றால், அதற்கு முக்கியக் காரணம் அவருக்கிருந்த தமிழ்ப்பற்றுத்தான். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்னும் குறட்பாவில் நம்பிக்கை கொண்டு, அகச்சமயத்தினரான சைவ - வைணவத் தமிழர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் மறைக்கப் பட்டிருந்த சீவக சிந்தாமணிக்குப் புதுவாழ்வு தந்தார். பதிப்பாசிரியர் எனப் பெயர் பெற்ற ஐயரவர்கள் முதன் முதலாகப் பதிப்பித்த தமிழ்இலக்கியம் சீவக சிந்தாமணிதான். 1887 ஆம் ஆண்டில் அதன் முதல் பதிப்பை வெளியிட்டார். சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த பின்னர், 1889ல் "பத்துப்பாட்டு" என்னும் சங்க இலக்கியத்தையும், 1892ல் "சிலப்பதிகாரம்" என்னும் பெருங் காப்பியத்தையும், 1895ல் "புறநானூறு" என்னும் சங்க இலக்கியத்தையும் பதிப்பித்தார். இந்த நான்கு நூல்களையும் வெளியிட்ட பின்னர், 1898ல் பௌத்த காப்பியமான "மணிமேகலை"யைப் பதிப்பித்தார்.19ம் நூற்றாண்டின் இறுதியிலே தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குத் தாம் ஆற்றிய இந்தப் பணிகளை அடுத்து, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), பரிபாடல் (1918), குறுந்தொகை (1937) ஆகிய சங்க இலக்கியங்களை அச்சிட்டு வெளியிடலானார். சமய காப்பியமான சீவகசிந்தாமணியையும், பௌத்த காப்பியமான மணிமேகலையையும் ஐயரவர்கள் வெளியிட்டதன் காரணமாக, தம் காலத்தில் எழுச்சி கொண்டிருந்த கலாச்சார ஒருமைப்பாட்டுப் புரட்சியிலே அவர் பங்கு கொண்டார். தமிழ் இலக்கிய ஏடுகளைத் தேடியலைவதை ஒரு இயக்க மாகவே நடத்தியிருக்கிறார் சாமிநாதய்யர். அவர் பதிப்பித்தளித்த சங்க இலக்கியங்களாலும் சிலப்பதிகாரத்தாலும் தமிழ் மொழி பேசும் மக்களிடையே 'தமிழர்' என்ற இன உணர்ச்சியும், அவ்வழி |