இன எழுச்சியும், புதிய தமிழகம் படைக்கும் பெருமுயற்சியும் தோன்றின
எனலாம். பரிதிமாற் கலைஞர்
"பரிதிமாற் கலைஞர்" என்ற தூய தமிழ்ப்பெயர் பெற்ற வி.கோ. சூரிய
நாராயண சாஸ்திரியார், 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் புது
வாழ்வளித்த மற்றொரு பெரியாராவார். இவர், தமிழில் நாடக இலக்கணம்
இல்லாத குறையைப் போக்க, " நாடக இயல் " என்னும் நூலை இயற்றி
வழங்கினார். வடமொழியின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழ்மொழியின்
தனித்தன்மையைக் காத்த தமிழ்ப்பெரும் புலவர்களிலே பரிதிமாற் கலைஞரே
முதல்வராவார். 'தமிழ்மொழியின் வரலாறு' என்னும் பெயரில் அவர் எழுதிய
உரைநடை நூல், பிற்காலத்தில் தமிழ் மொழிக்கு விடுதலை அளிக்கத்
தோன்றிய பெருங்கிளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கியதெனலாம்.
ராவ்பகதூர் பி.சுந்தரம் பிள்ளை அவர்கள், 19 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய மற்றொரு பெரியாராவார்.
தமிழ் மொழியை, வழிபடும் தெய்வமாகக் கற்பித்துக் கொண்டு, பாடல்கள்
இயற்றி, பக்தி செலுத்தினார் சுந்தரம் பிள்ளை. "மனோன்மணீயம்" என்னும்
நவீன நாடகமொன்றைச் செய்யுள் நடையில் இயற்றி, தனிச்சிறப்புப் பெற்றார்.
இவர் காலத்தில் தோன்றி பிற்காலத்தில் வளர்ந்து வலுப்பெற்ற தனித்தமிழ்க்
கிளர்ச்சிக்கு இவரும் துணைபுரிந்துள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலே, தமிழகத்தில் ஒவ்வொரு
துறையிலேயும் தமிழ்மொழி உரிமையிழந்து நின்றது. இசையரங்கில் தெலுங்கு;
இறைவன் கோயிலில் வடமொழி; அரசியலில் ஆங்கிலம் - என, துறைதோறும்
வேற்றுமொழிகள் ஆதிக்கம் பெற்றமையால், தமிழ்மொழி அடுப்பங்கரையளவில்
சிறைப்பட்டிருந்த. வடமொழியின் ஊடுருவலால் 'மணிப்பிரவாளம்' என்ற புது
மொழி யொன்றும் தோன்றியது. அரசியலில் தமிழர் ஆங்கிலேயருக்கு
அடிமைப்பட்டிருந்தனராதலால், தமிழ் மொழியின் உரிமைகாக்கப் போராடுவது
புலவர் பெருமக்களின் பொறுப்பாக இருந்தது.
அந்தப் பொறுப்பினை ஏற்று, பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் வாழ்ந்த புலவர் பெருமக்களிலே சிலர் தமிழ் மொழியை
வளர்ப்பதில் மட்டுமன்றி, அம்மொழியைப் பிறமொழிகளின் ஆதிக்