பக்கம் எண் :

104தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

மேற்கணக்கின் இயல்பு ‘ஐம்பது முதலா, ஐந்நூறு ஈறா, ஐவகைப் பாவும்
பொருள்நெறி மரபின் தொகுக்கப்படுவது மேற்கணக்காகும்’ என்றும்,
கீழ்க்கணக்கின் இயல்பு ‘அடிநிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதி அறம்,
பொருள், இன்பம் அடுக்கி, அவ்வகைத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்’
என்றும் கூறும் சில மேற்கோள்களைப் பன்னிருபாட்டியல் எடுத்துக்
காட்டுகின்றது. எனவே, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இத்தகைய
பாகுபாடானது தமிழகத்தில் காணப்பட்டது என்பது தெளிவாகின்றது.
ஆகையால், இப்பாகுபாடு செய்யுள்களின் அடி எண்களைக்குறித்ததே தவிர
நூலின் பெருமை குறித்ததன்று. கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றிலும்
ஆறடிக்கு மேல் ஏறாத செய்யுள்களே காணப்படும்; அச்செய்யுள்கள்
வெண்பாக்களாக இருக்கும் ; ஒழுக்கத்தைப் பற்றியே பேசும். மேற்கணக்கு
நூல்களோ அகவல் அல்லது கலிப்பா அல்லது பரிபாடல் என்னும் செய்யுள்
இலக்கணத்தில் அமைந்திருக்கும்.

     கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் ‘சங்கம் மருவிய நூல்களாம்’
என்று அறிஞர்கள் வழிவழிக் கூறிவருகின்றனர். கீழ்க்கணக்கு நூல்கள்
இயற்றியவர்களைப் ‘பிற்சான்றோர்’ என்று பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
இதை நோக்கின் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கத் தொகை நூல்களுக்கெல்லாம்
காலத்தால் பிற்பட்டவையாம் எனத் தெளிவாகின்றது. சங்க காலத்துடன்
தொடர்பு கொண்டவை இந் நூல்கள் என்று ஊகிக்கலாம். சங்கம்
மறைந்துவரும் காலத்திலோ, அது முற்றிலும் இறுதியாக மறைந்துவிட்டதன்
பிறகோ இந்நூல்கள் தோன்றியிருக்க வேண்டும்.

     கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துக்கும் காலவரை யிடுதலில் பல
இடையூறுகள் உள்ளன. சில ஆய்வாளர்கள் இவற்றைக் கி.பி. 7 முதல் 9ஆம்
நூற்றாண்டு வரையிலான காலத்துக்குள் ஒடுக்குவர். நாலடியாரில் முத்தரைய
மன்னர் இருவரைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.37 அதில் இவர்கள்
‘பெரு முத்தரையர்’ என்று பாராட்டப் பெறுகின்றனர். இச்சான்று ஒன்றை
மட்டுங் கொண்டு நாலடியார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு
தோன்றியிருக்க முடியாது என்று சிலர் கருதுவர். ‘முத்தரையரைப்பற்றிய
செய்திகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டில்தான் முதலில் கல்வெட்டுகளில்
காணப்படுகின்றன. ஆகவே,

    37. நாலடி. 200. 296.
    38. தமிழ் இலக்கிய வரலாறு, (கி.பி. 250-600) சதாசிவபண்டாரத்தார்