| பொய்கையார் அச் சேரன் அவையை அணி செய்து அமர்ந்திருந்தவர். அவர் இந் நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்துச் சேரனுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தார். இச் செய்தியைச் சுவைபடக் கூறுவதுதான் களவழி நாற்பது என்பது. இதன் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள பதிகம் ஒன்று இதைப் பொய்கையார் இயற்றினார் எனக் கூறுகின்றது. பொய்கையார் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.40 இப் பாடல்கள் சேரமான் கோக்கோதை மார்பன்மீது பாடப்பெற்றவை. களவழி பாடிய பொய்கையாரும், இப் புறப்பாட்டுகள் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றும், அவர் கடைச்சங்க காலத்தவர் என்றும் அறிஞர் சிலர் கருதுகின்றனர். பொய்கையாரின் பாடலுக்குப் பரிசிலாகச் சேர மன்னன் விடுதலை செய்யப்பட்டான் என்ற செய்தியைப் பதிகம் தெரிவிக்கின்றது. ஆனால் இப் போரைப்பற்றிக் கூறும் புறப்பாடல் ஒன்று இச் செய்திக்கு முரணாக மற்றொரு குறிப்பைத் தருகின்றது. இப் பாடலை இயற்றியவன் சேரமான் கணைக்கால் இரும்பொறையேதான். போர்க்களத்தில் தோல்வியுற்றுக் குடவாயிற் கோட்டத்தில் சிறை செய்யப் பட்டிருந்த அம் மன்னன் நாவறண்டு தண்ணீர் கேட்டான். தண்ணீர் காலந்தாழ்த்துக் கொடுக்கப்பட்டது. மானம் மேலீட்டால் அத் தண்ணீரைக் குடிக்க மறுத்து உயிர் நீத்தான். உயிர்விடு முன்பு அவன் மறச்சுவை ததும்பும் இப் புறப்பாட்டைப் பாடினான். தஞ்சை விசயாலய சோழன் மேல் பெற்ற வெற்றியைப் பாடுவது களவழி நாற்பது என்று குலோத்துங்கச் சோழன் உலாவின் பழைய உரையாசிரியர் ஒருவர் கூறுகின்றார். இவர் கருத்து உண்மையாயின் களவழி நாற்பது கி.பி. 850ஆம் ஆண்டளவில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே, இவர் கூற்று நம்பத் தகுந்ததன்று. களவழிப் பதிகமும் புறநானூற்றுப் பாடலும் அளிக்கும் செய்திகளே உண்மையெனத் தோன்றுகின்றன. களவழி கூறும் வரலாற்றினைக் கலிங்கத்துப் பரணியும்41 மூவருலாவும்42 உறுதி செய்கின்றன. சேரமானின் இறுதி என்னவாயிற்று என்று திட்டமாக அறிந்துகொள்ள முடியவில்லை. களவழிப் பதிகம் எழுதியவரும், புறநானூற்றுப் பாடல்களின் அடிக் குறிப்பு எழுதியவரும் வெவ்வேறு காலத்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்கள் ஒருவரோடொருவர் முரண்பட்டுப் பொய்ச் 40. புறம். 48, 49 41. கலிங். 195. 42. மூவருலா. விக்கி-14. |