பக்கம் எண் :

108தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

செய்திகளைப் புனைந்து எழுதி வைக்கத் தேவையே இல்லை. களவழிப்
பதிகம் தரும் செய்தி பொய்யாக இருந்திருக்குமாயின் பிற்பட்டு எழுந்த
நூல்களான கலிங்கத்துப் பரணியிலும், மூவருலாவிலும் அது சேர்ந்திருக்காது.

     கடைச்சங்கப் புலவர் பொய்கையார் எனபார் ஒருவர் இருந்தார் என்பது
மறுக்க முடியாதது. அவர் புறப்பாடல் இரண்டும்43 நற்றிணைச் செய்யுள்44
ஒன்றும் யாத்துள்ளார். கடைச்சங்க காலத்தில் செங்கணான் என்ற
சோழ மன்னன் ஒருவன் வாழ்ந்திருந்ததும் உண்மையே. அன்பில்
செப்பேடுகளில்45 குறிப்பிடப்படும் நல்லடி என்பவன் அவன் மகன் ஆவான்.
அவனைப்பற்றிய செய்தி ஒன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றில்46
கிடைக்கின்றது. சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை என்பவனே
புறநானூற்றுக் கோக்கோதை மார்பனாக இருக்கலாம் என்பதில் ஐயமின்று.
எனவே, இச் சான்றுகளைக் கொண்டு களவழி நாற்பது கி.பி. மூன்றாம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

     முதுமொழிக் காஞ்சியை இயற்றியவர் கூடலூர் கிழார் ஆவார்.
இவருடைய பாட்டு ஒன்று47 புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. கோச்
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்ததற்கு இவர்
உளம் வருந்திப் பாடிய பாடல் அது. இவருடைய பாடல்கள் மூன்று
குறுந்தொகையிலும் இடம் பெற்றுள்ளன.48 அச் சேரமன்னன் இப் புலவரின்
நெருங்கிய நண்பனாக இருந்தவன். அவனுடைய விருப்பத்தின் மேல் இவர்
ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுத்துக் கொடுத்தார். இவர் கடைச்சங்க
காலத்தவர் என்று இவருடைய புறப்பாடலானும், ஐங்குறுநூற்றுத் தொகுப்பைக்
கொண்டும் அறியலாம்.

     களவு ஒழுக்கத்தைப் பாடும் ஆறு நூல்களான ஐந்திணையைம்பது, கார்
நாற்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை,
திணைமாலை நூற்றைம்பது ஆகியவை கி.பி. 4, 5ஆம் நூற்றாண்டுகளில்
தோன்றியவை. அறவொழுக்கத்தைக்

     43. புறம். 48. 44.
     44. நற்றி. 18.
     45. எபி. இந்தி. xv. 5;
     46. அகம். 356.
     47. புறம். 229.
     48. குறுந். 166, 167, 214.