பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 141

நிறுத்தப் பெறும் தகுதியைக் கொடுத்தும், அவனுக்குச் சான்றோன் என்ற
பாராட்டுக் கிடைக்கச் செய்வதும் தந்தையின் கடன் என்றும் பெண்கள்
எண்ணினர்.39

     கணவனை இழந்த பெண் அக் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம்
காணப்பட்டது.40 கைம்மை நோன்பு நோற்கும் வழக்கமும் பெண்கள்
மேற்கொண்டிருந்தனர். கைம்பெண்கள் நெய்யுண்பதில்லை; தண்ணீர்ச்
சோற்றைப் பிழிந்து எடுத்துக் கொண்டு, அதனுடன், அரைத்த எள்ளையும்
புளியையுங்கூட்டி வெந்த வேளைக்கீரையுடன் அவர்கள் உண்ணுவர்.
கைம்பெண்கள் பாய்மேல் படுப்பதில்லை; வெறுந்தரையின்மேல்தான் படுத்துத்
தூங்கினர். இவர்கள் தலையை மழித்துக்கொள்ளும் வழக்கமும் உண்டு.
தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியரும் இக்கைம்மை நோன்பை
மேற்கொண்டனர். இப்போது பெரும்பாலும் கைம்மைநோன்பு நோற்கும்
வழக்கம் பிராமணக் கைம்பெண்களிடமே காணப்படுகின்றது. வேறு குலத்தைச்
சார்ந்தவர்களும் அண்மைக் காலம் வரையில் தென்னார்க்காடு, தஞ்சாவூர்
போன்ற சில மாவட்டங்களில் தலைமழித்து முக்காடிட்டுக் கைம்மைக் கோலங்
கொண்டதுண்டு. இப்போது பிராமணக் குலத்துக் கைம்பெண்களும்
தலைமழித்துக் கொள்ளுவதையும், வெள்ளாடை யணிவதையும், முக்காடிட்டுக்
கொள்ளுவதையும் தவிர்த்து வருகின்றனர். மங்கல நாணும், நெற்றிப்
பொட்டும், மஞ்சள் பூச்சும், மலர் சூட்டுந் தவிர, ஏனைய ஒப்பனைகள்
அனைத்தையும் அவர்கள் கைவிடாமல் ஏற்றுக்கொண்டிருப்பதை இந் நாளில்
காணலாம்.

     பழந்தமிழகத்தில் இல்லத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மேற்கொள்ள
வேண்டிய கடமைகள் இன்னின்னவென வகுக்கப்பட்டிருந்தன.41
‘தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்’ ஆகியவர்களுக்கும் ஒருவன் தன்
வருமானத்தைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். ஒரு பகுதியை தனக்கும் தன்
குடும்பத்துக்கும் நிறுத்திக்கொண்டு, மற்றொரு பகுதியை அரசாங்கக்
கடமைகளுக்குச் செலுத்திவிடவேண்டும். தம் வீட்டில் தங்கி, அதாவது பிறரை
நாடிப் பிழைக்காமல், தம் வருமானத்தைப் பிரித்தளித்து வாழ்வதே இன்ப
வாழ்க்கையாகும் என்பது தமிழரின் மரபாகும்.42 ஆடவரின் சிறந்த
கடமை, தொழில் புரிந்து பொருள் ஈட்டுவதாம். தன் மனைவியை விட்டுப்
பிரிந்து சென்றிருந்தும் பொருள் ஈட்டுவதைச் சீரிய கடமையாகக்

     39. புறம். 312.
     40. புறம். 246.
     41. குறள், 43.
     42. குறள். 1107.