பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 143

முரிவோ காணப்படாது. சோறு ஒன்றோடொன்று இழையாமல் பதமாக
வெந்திருக்கும். பழஞ்சோற்றையும் மக்கள் உண்பதுண்டு.54 அரிசி,
கொள்ளுப்பருப்பு, பயற்றம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் கூட்டிக் கஞ்சி
காய்ச்சிக் குடிப்பார்கள்.55 புளிக்க வைத்த மாவைக் கரைத்துப் புளிங்கூழ்
ஆக்குவார்கள்.56 பல விதமான பணியாரங்கள் செய்யப்பட்டன. வேடர்கள்
விரும்பியுண்ட உணவு புளிச்சோறு.57

     பழந்தமிழர் புளியங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை ஊறவைத்த
காடியைப் பெரிதும் விரும்பினர்.58 பாலைத் தோய்த்து வெண்ணெய் திரட்டும்
வழக்கம் அந் நாளிலேயே இருந்து வந்தது. வெண்ணெயைப் பதமாகக்
காய்ச்சி நெய் எடுத்துச் சோற்றில் வார்த்து உண்பார்கள்.

     பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவியிருந்தது.59
பார்ப்பனரும் ஊன் உண்டதற்குச் சான்றுகள் உண்டு.60 வெள்ளாடு,
செம்மறியாடு, மான், முயல், ஆமா, மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி,
காட்டுக்கோழி, காடை, உடும்பு முதலியவற்றின் இறைச்சியைத் தனியாகவோ,
பாலும் அரிசியுங் கூட்டியோ சமைப்பார்கள். ஊன் சோறு என்பது இப்போது
புலவு என்று வழங்குகிறது. அது பழங்காலத் தமிழரின் உணவாக இருந்து
பிறகு இடையில் சில காலம் வழக்கற்றுப் போயிற்று. முஸ்லிம்கள் நாட்டில்
குடியமர்ந்த பிறகு அது மீண்டும் வழக்கத்துக்கு வந்துள்ளது. ஊனை நெய்யில்
பொரிப்பதுண்டு.61 புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிங்கறி
சமைப்பதுண்டு.62 நெல்லை இடித்து ஆண்பன்றிக்குத் தீனியாகக் கொடுத்து
அதைக் கொழுக்க வைப்பார்கள். அதைப் பெண்பன்றியுடன் சேரவிடாமல்
தனியாகக் குழிகளில் விட்டு வளர்த்துப் பிறகு அதைக் கொன்று அதன்
ஊனைச் சமைத்துத் தின்பர்.63 இக் காலத்து மக்களைப் போலவே
பழந்தமிழரும் ஊனை உப்புக்கண்டம் போடுவதுண்டு.64 அவர்கள் ஊன்
துண்டங்களை இரும்புக் கம்பிகளில் கோத்து நெருப்பில் வாட்டியுண்பார்கள்.65

     கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழகத்தில் மிகவும் விரிவாகக்
காணப்பட்டது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர்,

     54. புறம். 399.
     55. அகம். 37.
     56. புறம். 399.
     57. பொருநர். 107-8.
     58. பெரும்பாண். 56-7.
     59. புறம். 14.
     60. புறம். 111.
     61. குறுந். 39.
     62. புறம். 119.
     63. பெரும்பாண். 34-35
     64. பெரும்பாண். 100.
     65. பொருநர். 105.