பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 171

கடவுளும் சமயமும்

     தமிழருக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்திருந்த ஆதிகுடிகளின் கடவுட்
கொள்கைகளும், தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக்
கொள்கைகளும் ஒன்றுகலந்து சங்க காலத்து மக்கள் சமுதாயத்தில் இடம்
பெற்றிருந்தன. தமிழர் உயிர் துறந்த வீரர்கட்குக் கல்நாட்டி வணங்கினர்.
வீரக்கல் நடும் வழக்கம் தொல்காப்பியத்துக்கு முன்பே காணப்பட்டது. அந்
நடுகற்களுக்கு மலர்மாலை அணிவித்து மயிற்பீலிகளால் அணி செய்வர்.223
பழந்தமிழர் பேய்பூதங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.224 அவர்கள்
காலத்தில் மரணத்துக்குப் பிற்பட்ட துறக்கம், நரகம் என்ற நிலைகளைப்
பற்றிய கொள்கைகள் உருவாகிவிட்டன.225

     மரத்தின்கீழ்த் தெய்வங்கள் தங்கியிருந்தன என்று அக்காலத்து மக்கள்
நம்பினர்.226 ஆலமரத்தின்கீழ்ச் சிவபெருமான் அமர்ந்திருப்பதாகப் புராணக்
கூற்றுகள் உண்டு.227 ஆலிலை மேல் திருமால் பள்ளிகொண்டார். வேம்பு,
கடம்பு, வில்வம், கொன்றை முதலிய மரங்கள் தெய்விகம் பெற்றிருந்தன.
மன்னர் தமக்கெனக் காவல் மரங்கள் கொண்டிருந்தனர்.228 பண்டைக்
காலத்தில் மூன்றாம் பிறையைத் தொழும் வழக்கம் பெரிதும்
காணப்பட்டது.229

     ஹாரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் சிவலிங்க வழிபாடு செய்துவந்தனர்
என்று அங்குக் கிடைத்துள்ள சான்றுகள் சிலவற்றால் அறிகின்றோம். இவ்
வழிபாட்டைப் பால்குறி வழிபாட்டின் வடிவமாகக் கொள்ளுகின்றனர்.
தமிழர்கள் இப்பண்டைய நாகரிகத்தைச் சார்ந்தவர்கள் என்று
ஆராய்ச்சியினால் உறுதியாகுமாயின் பால்குறி வழிபாடு இற்றைக்குப்
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழரிடையே நிலவி வந்ததெனக்
கொள்ளலாகும்.

     குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து
திணைகட்கும் ஐந்து கடவுளர் வழிபாட்டுக்குரியவர்களாக இருந்தனர்.
சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகிய இக்
கடவுளரைப் பற்றிய எண்ணற்ற புராணக் கதைகள் சிலப்பதிகாரக்
காலத்துக்குள் தமிழகத்தில் நுழைந்து

     223. புறம். 232, 264.
     224. பதிற்றுப். 18 : 15
     225. புறம். 240 : 6
     226. அகம். 270 : 12
     227. புறம். 188 : 9
     228. புறம். 23, 36, 57, 162, 336.
     229. புறம். 1 : 9-10 ; குறுந். 178.