| ஒன்று அகநானூற்றிலும்,262 மற்றொன்று நற்றிணையிலும்263 சேர்க்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட பாண்டியரே அன்றி வேறு சில பாண்டிய மன்னரின் பெயர்களும் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. அவர்களைப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை. சங்க காலத்துப் பாண்டிய மன்னருள் பன்னிருவர் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கினர் என்பது பாராட்டத் தக்கதாகும். இவர்களுடைய பாடல்கள் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. குறுநில மன்னர்கள் தமிழகத்தில் குறுநில மன்னர்கள் பலர் ஆங்காங்கு வாழ்ந்திருந்தனர்; அவர்களுள் வேளிர்கள் என்பவர்கள் ஒரு குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் சிறந்தவன் ஆய் அண்டிரன் என்ற மன்னன். அவனைப் பாடிய புலவர்கள் பலர்.264 அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளான். அவன் பொதிய மலையை ஆண்டுவந்தான். கொங்கு நாட்டைத் தனக்குப் பணிய வைத்தவன். ஆய் அண்டிரன் மிகச் சிறந்த பண்பாளன் என்று ஒளவையார் பாடியுள்ளார்.265 இப் பிறப்பில் செய்யும் நன்மை மறுபிறப்புக்கு உதவும் என்று கருதித் தன் பொருளைக் கொடையாக அளித்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அல்லன் ஆய் என்று அவன் பாராட்டப் பட்டுள்ளான். கபிலரின் நண்பனான பாரி என்பான் மற்றொரு வேளிர் குலத் தலைவனாவான். பாண்டி நாட்டில் கொடுங்குன்றம் என்ற இடத்தினின்றும் ஆட்சி புரிந்து வந்தான். கேட்டவர்கள் கேட்டவாறே வாரி வழங்கிய வள்ளல் என்று பிற்காலத்தவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்266 பாடியுள்ளார். ‘ஒசிந்த கொடி முல்லைக்குக் கொழு கொம்பாகத் தன் தேரை நிறுத்தினான் இவன்’ என்று கூறுவார்.267 இவனைப்பற்றிக் கபிலர் பாடிய பாடல்கள் பல. சேர சோழ பாண்டியர் ஆகிய மூவரும் இவனுடைய கோட்டையை முற்றுகையிட்டனர். முற்றுகை அளவு கடந்து நீடித்தது. கோட்டைக்குள் உணவுப்பண்டங்கள் குறைந்துவிட்டன. கபிலர் பல கிளிகளைப் பிடித்துப் பயிற்றுவித்துப் 262. அகம். 26. 263. நற்றி. 98. 264. புறம். 127, 240, 241, 374, 375. 265. புறம். 34. 266. தேவாரம். 7 : 34 ; 2 267. சிறுபாண். 89-91 |