இவன் ஓர் இரத்த வெறி பிடித்த மாபெரும் அரக்கனாவான். அவன் முதன்முதல் வல்லாளனை ஒழிக்க முயன்றான். எனவே, 1341-ல் வல்லாளன் மேல் போர்தொடுத்தான்; வல்லாளன் கி.பி.1340-ஆம் ஆண்டிலேயே திருவண்ணாமலையில் தன் படைகளை நிறுத்தியிருந்தான். அலாவுதீனுக்கும் வல்லாளனுக்கும் ஏற்பட்ட மோதலில், சுல்தான் வெற்றி காண விரைந்த சமயம் யாரோ ஒருவன் எய்த அம்பு தன் மார்பில் தைத்து உயிர் துறந்தான். அவனை யடுத்து அவனுடைய மருமகன் மதுரையில் அரியணை ஏறினான். அவன் ஆட்சித்துறைக்குத் தகுதியற்றவனாகக் காணப்பட்டான்; அக் காரணத்தாலோ அன்றி வேறெக் காரணத்தாலோ கொலையுண்டு இறந்தான். அவனை யடுத்துக் கியாசுதீன் துக்ளக் என்பவன் பட்டம் ஏற்றான். அவ்வமயம் வீரவல்லாளன் கண்ணனூர்-கொப்பம் என்ற ஊரில் இருந்த முஸ்லிம் மலைக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தான். அவனுடைய முதுமையும் பேதைமையும் அவனுக்கு இடையூறாக இருந்தன. அதனால் அவனுடைய முற்றுகை தளர்ச்சியுற்றது. உடனே மதுரை சுல்தான் வாய்ப்பை நழுவவிடாமல் விரைந்து சென்று வல்லாளனைச் சூழ்ந்துகொண்டான். திகைப்பில் ஆழ்ந்த வல்லாளன் செயலற்று நின்றான். சுல்தான் அவனைச் சிறைப்பிடித்ததுமன்றி அவனுடைய செல்வங்கள், யானைகள், குதிரைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டான்; வயது முதிர்ந்த வீரவல்லாளனைக் கொன்று, தோலை யுரித்து உடலுக்குள் வைக்கோல் அடைத்து மதுரையின் மதிற்சுவரின்மேல் அதைத் தொங்கவிட்டான்; இந்துக் குடிகளைக் கொன்று குவித்தான். ஆண்களைக் கழுவிலேற்றினான். பெண்களின் கழுத்தை நெரித்துக் கொன்றான். தாயின் மார்பில் பால் உண்டுகொண்டிருந்த குழந்தைகளை வாளால் எறிந்தான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களுக்கு அணிவித்தான். இக் கொடுங்கோன்மை மக்களின் வாழ்க்கைக்குக் கேடு சூழ்ந்து கொண்டிருந்த போதே விசயநகர மன்னரின் ஆக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. விசய நகர ஆட்சி முதலாம் புக்கன் (கி.பி. 1344-77) விசயநகரப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட பிறகு மேற்கொண்ட பல ஆக்கப் பணிகளுள் மதுரையைச் சுல்தான்களின் பிடியிலிருந்து விடுவித்தது மிகச் சிறந்த தொன்றாகும். இம் மாபெரும் வீரச் செயல்களைப் புரிந்து மக்களைச் சுல்தான்களின் கொடுங்கோன்மையினின்றும் மீட்டவன் |